ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

சோளக்காட்டு பொம்மை (Adaptation of 'The Scarecrow' by Khalil Gibran - 'The Madman')

கடந்த வருடம்...


வயல்வெளி ரசித்து கடந்து போகையில் 

தன்னந்தனியனாய் நின்றிருந்தாய் 

பயம் காட்டும் சோளக்காட்டு பொம்மையாய் 



சற்றே அருகே போய் பார்த்தேன் பயத்தோடு 

யாரை பயமுறுத்த நின்றிருக்கிறாய் என்றேன் 

பறவைகளையும் குருவிகளையும் தான் என்றாய் 


ஓ அது சரி அது சரி கேட்க நினைத்தேன் 

தனிமையில், ராவும் பகலுமாய், மழையிலும் வெயிலிலும் 

பொறுமையாய் நின்றிருக்க வலிக்கவில்லையா என்றேன் 


எனது பயணம் தெளிவாக இருக்கும்போது வலி ஏது?

பயமுறுத்தி மகிழ்வதன் இன்பம் அலாதி, என்றாய் 

நானும் அரை நிமிட அமைதிக்குப்பின் ஆமோதித்தேன் 


உனக்கும் பயம் தருவது இன்பமா? என்றாய்

'வாய்ப்பே இல்லை' என ஏளனமாய் சிரித்தாய் 

இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் 


பொம்மை சொன்ன வார்த்தைகள் உண்மை பேசியதை உணர்ந்தேன் 

அவனிடமிருந்து விலகி வந்து சற்றே யோசித்தேன் 

அது புகழ்ச்சியா? இகழ்ச்சியா? இல்ல வஞ்சப்புகழ்ச்சியா?


மீண்டும் ஓர் ஆண்டு கழிந்து ...


மீண்டும் வயல் கடந்து போகையில் அதே வயலில் சந்தித்தேன் 

பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை அவனிடம் அந்த ஒன்றை தவிர 

அவன் கழுத்துக்கு கீழ் ஓர் 'குருவிக்கூடு'


இதயமற்ற வெற்றுடலுக்கே இரக்கம் துளிர்க்குமெனில் 

சோளக்காட்டு பொம்மையே அன்பு காட்டுமெனில் 

இதயம் கொண்ட எனக்கு என்ன தகுதி இல்லை?