ஞாயிறு, 5 மே, 2024

படிச்சுதான் பாருங்க: "கிழவனும் கடலும்" - நூல் மதிப்புரை

 பொதுவாகவே கதைகள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. மிக தேர்ந்த நூல் தொகுப்புகளை மட்டுமே இது வரை ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி படித்திருக்கிறேன். அவ்வாறு நான் படித்த கதைகளில் ஒன்று வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்" சுமார் 7 அல்லது 8 முறை படித்திருப்பேன். முதன் முறையாக, கையில் புத்தகத்தோடு கடற்கரையில் பல மணி நேரம் நின்று கடலின் பெருமைகளை நினைத்து பார்க்க வைத்தது அந்த புத்தகம் தான். இன்று பல மணி நேரம் கடலின் கரையில் சிறுமணற் துகளோடு துகளாய் தவம் காத்திருக்கும் பண்பை வளர்த்தது "தண்ணீர் தேசம்" தான்.

இன்னும் சிறு வயதில் கடலின் மீது மிக பெரிய ஆச்சர்யத்தை உருவாக்கியது அந்த கால தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய "THE SECRETS OF THE SEA" என்ற ஆவணப்படம். ஆழ்கடலின் அதிசயங்களை தண்ணீருக்கடியில் சென்று படம் பிடித்து நம்மையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்க செய்தது அந்த தொடர்.

பதின்ம வயதில் HOLYWOOD திரைப்படமான “THE WATER WORLD” பார்க்க நேர்ந்தது. கடலின் பிரம்மாண்டம் என்ன என்பதை வாய்பிளந்து பார்க்க வைத்தது அப்படம். ஒரு வித பயத்தையும் உருவாக்கியது. பிறகு ABYSS என்ற மற்றொரு படம், அதன் பிறகு TITANIC போன்ற படங்கள் கடலையும் என்னையும் நிறையவே தொடர்பு படுத்தியது. இன்றும் கடலை பார்த்தால் ஏதோ ஒரு உள்ளுணர்வு என்னை அதனோடு இணைத்தது.

அப்படித்தான் எனக்கும் கடலுக்குமான ஒரு வித வினோத உறவு தொடர்ந்து வந்தது. இரண்டு மூன்று முறை கடலுக்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், ஒரு வித சொல்ல முடியாத உற்சாகம் உள்ளுக்குள் புகுந்து கொள்வதை உணர்ந்தேன். கடலுக்கும் அந்த உணர்வு உள்ளது போன்று தான் நானும் உணர்ந்தேன்.

இப்படி இருக்கையில், ஒரு மாதம் முன்பு எனது சக ஆசிரியர் வழியாக "கிழவனும் கடலும்" என்ற புத்தகத்தை கையில் எடுக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. எர்னெஸ்ட் ஹெம்மிங்வே பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். அவருடைய வித்தியாசமான வாழ்வும் விவரிக்கமுடியாத சோக முடிவும் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. அவருடைய புத்தகம் "THE OLDMAN AND THE SEA" என்ற புத்தகத்தை பல ஹாலிவுட் திரைப்படங்களில் மேற்கோள் காட்டுவதை பார்த்திருக்கிறேன். அதன் மேலான ஆர்வம் அதிகரிக்கவே ஆங்கிலத்தில் படிக்கவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் தமிழில் படிக்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது.

புத்தகத்துக்குள் செல்வோம்...

எர்னஸ்ட் ஹெமிங்வேயின் நாவல், "கிழவனும் கடலும்", மனிதனின் விடாமுயற்சி, இயற்கையின் மீதான மரியாதை மற்றும் வாழ்க்கையின் கசப்பான உண்மைகள் போன்ற ஆழமான கருப்பொருள்களை  எதிரொலிக்கும், ஏமாற்றம் தரும் கதையாகும். ஆமாம் ஏமாற்றம் தரும் கதை தான். நமக்கு திரைப்படங்களை பார்த்து பார்த்து வெற்றி தரும் முடிவுகளை கொண்ட கதையை தான் எதிர்பார்க்கிறோம். ஆனால் வாழ்க்கை வினோதமான ஆசிரியர். ஏமாற்றம் வழியாகவும்  பாடத்தை கற்பிக்கின்றது. கதையின் மையத்தில் சாண்டியாகோ என்ற முதிர்ந்த, அனுபவமிக்க மீனவர் மற்றும் அவரோடு பயணிக்கும் ஒரு அற்புதமான மீன் மார்லின். இவர்களிடையே நடைபெறும் காவியப் போராட்டம் தான் கதையின் கரு.

சாண்டியாகோ என்ற கதாபாத்திரம் "கிழவன்" என்ற சொல்லுக்கே அழகு சேர்த்தவன். நம் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு பாத்திரம். "அவரது கழுத்தின் பின்பகுதியில் ஆழமான சுருக்கங்கள்", "கடலின் உப்பினாலும், கனமான மீன்களைத் தூக்கியதன் விளைவாக உண்டான கடினமான கரடுமுரடான கைகள்", வயதின் காரணமாக அவர் உடல் தளர்ந்து விட்டாலும், அவரது உள்ளம் உடையாமல் திடனாகவே உள்ளது என்று  ஹெமிங்வே எழுதுகிறார். ஹெமிங்வே, "கிழவன் எண்பத்து நான்கு நாட்களாக மீன் பிடிக்காமல் வெற்று வலையோடு திரும்பி வந்தார்" என்ற வலி மிகுந்த வரிகளை எழுதியபோது, கிழவனின் துரதிஷ்டத்தை மட்டுமல்ல அவரின் தொடர்ந்த விடா முயற்சியையும், அசைக்க முடியாத உறுதியையும் அவரின் வரிகள் எடுத்துக்காட்டுகிறது. மற்ற மீனவர்கள் அவரை இரக்கத்துடனும் மரியாதை கலந்த கருணையுடன் தான் பார்க்கிறார்கள். அந்த மரியாதைக்கு காரணம் அந்த கிழவன் வாழ்க்கையின் சவால்களுடன் மல்யுத்தம் செய்ததே காரணம். அதனால்தான், அவரை அனைவரும் "கிழவன்" என்று அழைக்கிறார்கள்.

கதை முழுவதும் பயணிக்கும் இன்னொரு கதாப்பாத்திரம் இறுதிவரை பெயரிடப்படாத மார்லின் வகை மீன் ஒன்று. இது ஒரு ஆழ்கடல் மீன். கூரிய மூக்கு கொண்ட வலிமையான மீன் வகை. கிழவன் தூண்டில் போட்டு பிடித்த வலையில் சிக்கியது சாதாரண மீன் அல்ல. மீன் கிடைத்ததும் ஏதோ கதை நிறைவு பெற்றதை போன்ற உணர்வு உண்டாகும். ஆனால் அது இந்த கதையின் தொடக்கம்.

சாண்டியாகோ அந்த உயிரினத்தின் அபரிமிதமான வலிமையை உணர்ந்த போது, அந்த மீன் கிழவனை படகோடு கடலுக்குள் இழுத்து கொண்டு சென்றது. கிழவனோ கோபப்படாமல் பதட்டப்படாமல் "மீனே, உனக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் இருக்க விரும்புகிறேன்" என்று உச்சரித்தார். இந்த ஒற்றை வரி அவர்களிருவரின் அசாதாரண உறவுக்கான தொனியாய் அமைகிறது. கிழவன், மீனின் சக்தியையும் சகிப்புத்தன்மையையும் பார்த்து வியக்கிறார், பாராட்டுகிறார். தொடக்கத்தில் அதை இரையாக பார்த்த கிழவன், தற்போது அதன் போராட்ட குணத்தை பார்த்து, அதை "சகோதரன்" என்று அழைக்கிறார். இந்த மரியாதை, வேட்டைக்காரன் - வேட்டையாடப்படும் இரை என்ற உறவின் தன்மையையே மாற்றுகிறது. பரந்து விரிந்த கடலானது அவர்களின் பகிரப்பட்ட அரங்காக மாறுகிறது, அங்கு இருவரும் உயிர்வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

ஹெமிங்வேயின் கதை சொல்லும் பாங்கு, கடலைப் போலவே, மேற்பரப்பில் மிக அமைதியாகவும், ஆனால் அதன் ஆழத்தில் உணர்ச்சிகளின் அடியோட்டங்களால் நிரம்பியுள்ளது.

சந்திரன் அருகில் வந்தபோது தண்ணீரில் அதன் பிரதிபலிப்பை முதியவர் பார்த்தார் போன்ற வர்ணனைகளில் அப்பட்டமான அழகு இருக்கிறது. அதே சமயம், சண்டையின் வன்முறையால் இந்த அமைதி குலைகிறது. மார்லின் ஒரு கட்டத்தில், ​தன் பெரிய தலையையும்  மற்றும் நீண்ட வெள்ளி போன்ற உடலை  தண்ணீரிலிருந்து எழுந்து காற்றில் உயர்த்திய போது அதன் அடங்க மறுக்கும் உணர்ச்சியும் அதன் உள்ளார்ந்த உணர்வு போராட்டமும் வெளிப்படுகிறது. இந்த மீனின் போராட்ட முயற்சிகள்  சாண்டியாகோவின் உள் மன போராட்டத்தை பிரதிபலிக்கின்றன: தகுதியான எதிரியுடன் போராடுவதில் பெருமையாக இருந்தாலும் இன்னொரு உயிரைப் பறிப்பதில் சோகமும் இருந்தது. ஆக அந்த உணர்ச்சிப்போராட்டங்கள் கடலின் அமைதிக்கு அடியில் நிகழும் நீரோட்டங்களை போல் அமைதியாய் நிகழ்ந்தது

கடல், ஒரு சக்திவாய்ந்த உடனிருப்பு. கதை முழுக்க நாம் கடலில் தான் பயணிக்கிறோம். ஹெமிங்வே, கடலை எப்போதும் நேசித்தார். அதனால்தான் அதை பிரமிப்புடனும் மரியாதையுடனும் சித்தரிக்கிறார். "கடல் எப்போதும் பசியோடு இருக்கிறது" என்ற அவரின் அந்த அழகான ஒற்றை வரி கடலின் தன்மையை உணர்த்துகிறது. இந்த பசி கடலின் மன்னிக்காத தன்மையை பிரதிபலிக்கிறது, ஆனால் அதன் ஆழத்தில் உள்ள வாழ்வின் மிகுதியையும் பிரதிபலிக்கிறது. சாண்டியாகோவின் மரியாதைக்கு தகுதியான ஒரு அற்புதமான உயிரினம், மார்லின், இந்த வாழ்வின் மிகுதியை உணர்த்துகிறது.

 மார்லின் பிடிபட்டு கொல்லப்பட்டு, மரியாதையோடு படகில் கட்டி கிழவனோடு பயணிக்க தயாராகும்போது, நாம் அனைவரும் இரண்டாம் முறை கதை முடிவுறுகிறது என்று நினைப்போம். ஆனால் கதையின் ஒரு பகுதி தான் முடிவு பெற்றுள்ளது. இந்த இரண்டாம் பகுதி தான் மிக கனமான பகுதி.

இப்போது கிழவனுக்கும் சுறாமீன்களுக்கும் இடையிலான போராட்டம். தனது மரியாதைக்குரிய மார்லின் உடலை சேதப்படுத்தாமல் கொண்டு போய் விட வேண்டும் என்று கிழவன் எடுக்கும், தனது உடல் வலிமைக்கு மீறின முயற்சிகள், கண்களையும் மனதையும் சேர்த்தே கலங்கடித்து விடுகின்றன. ஒவ்வொரு முறையும் கிழவன் தனது உடல் பொருள் அனைத்தையும் கொண்டு இறுதி வரை போராடுவதை பார்க்கும்போது மனது வலிக்கிறது. விரக்தியின் உச்சத்துக்கே நம்மை கொண்டு சேர்த்து விடுகிறது. கடைசியில் சுறாமீன்களிடம் தோல்வியுற்று, தனது சகோதரன் மார்லினின் தலை மட்டும் தப்பித்து கரை சேர்ந்த போது, நான் கண்ணீரை துடைத்து கொண்டு தான் அடுத்த பக்கத்துக்கு போக முடிந்தது. வாழ்க்கையில் விரக்தி என்பதை நான் அன்றுதான் உணர்ந்தேன். முயற்சிகள் எடுத்தும் நினைத்ததை செய்ய முடியவில்லை எண்ணும்போது, வாழ்க்கை கசக்க தான் செய்கிறது, கனக்கத்தான் செய்கிறது.

ஆனால் மார்லினின் தலை பகுதியை பார்த்த மற்ற மீனவர்களுக்கு, கிழவனின் மீதான மரியாதையை மேலும் கூட்டத்தான் செய்தது. வாழ்க்கை தொடரத்தான் செய்தது.

இது ஒரு மீன்பிடி கதை மட்டும் அல்ல. அதையும் தாண்டி துன்பங்களைத் தாங்கும் மனித ஆற்றலை விளக்கும் இக்கதை நமக்கு ஒரு சவாலாகும். சாண்டியாகோவிற்கும் மார்லினுக்கும் இடையிலான பிணைப்பு, அனைத்து உயிரினங்களின் பிரபஞ்ச இணைப்பை நமக்கு நினைவூட்டுகிறது.

வாசித்து உணருங்கள் வாழ்க்கையின் கனமான உணர்வுகளை.

PLEASE FIND THE LINK TO AMAZON FOR PURCHASE:

https://amzn.in/d/5rC82vU

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

சட்டைய மாத்துங்க சார்

 ஒரு நாள் வேலைக்கு கெளம்பும்போது, பக்கத்து வீட்டுக்காரர் என்னைப் பார்த்து என்ன சார் இப்புடியே ஸ்கூலுக்கு போகப் போறிங்களான்னு கேட்டார். ஒன்னும் புரியாம, ஏன் சார் என்ன ஆச்சுன்னு கேட்டேன். சட்டைய திருப்பி போட்டு இருக்கீங்க சார்னு சொன்னதும் தான் எனக்கு புரிஞ்சுது. சிரிச்சுகிட்டே தேங்க்ஸ் சொல்லிட்டு வீட்டுக்கு போய் சட்டைய திருப்பி போட்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பினேன்.

ஒரு சக மனிதனின் கவனித்தல், திருத்துதல் என்பது எனது நலனுக்கே என்ற பார்வையில், அதை பார்த்து அதை சரி செய்வது என்பது நமக்கு ஒரு இயல்பான செயலாகத்  தானே தோன்றுகிறது.

இல்லை நம்மில் யாராவது, நமது பக்கத்து வீட்டுக்காரரிடம், மொதல்ல உங்க சட்டைய ஒழுங்கா போட்டு இருக்கீங்களான்னு பாருங்க, அப்புறம் எனக்கு அட்வைஸ் பண்ணலாம்முன்னு சொல்லுவீங்களா?

அப்படி சொல்றவங்கள பாத்தா நமக்கு என்ன தோணும்? சரியான லூசா இருப்பான் போல இந்த ஆளுனு தானே யோசிப்போம். ஏன்னா இது பொது நடத்தை அல்ல. பிறழ் நடத்தைன்னு நமக்கு நல்லா தெரியும்.

இப்ப சொல்ல வந்த விஷயத்துக்கு வருவோம். நம்மள சுத்தி மூணு பக்கத்து வீட்டுக்காரன் இருக்கான். அதாவது இந்தியாவ கூர்நோக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள் அமெரிக்கா (Freedom House), ஸ்வீடன் (V-Dem) மற்றும் உலகளாவிய நாடுகளை தரவரிசை படுத்தும் மற்றொரு நிறுவனம் (The Economist Intelligence Unit), தங்களின் ஆண்டு அறிக்கையில் இந்தியாவை பற்றிய ஒரு சில கவனிப்புகளை முன் வைத்து உள்ளார்கள். இது வெறும் பக்கத்து  வீட்டுக்காரர் பார்த்து சொல்வது போன்ற செயல் அல்ல.

Freedom House ன் சமீபத்திய உலகளாவிய அறிக்கை 195 நாடுகள் மற்றும் 15 பிரதேசங்களில் உள்ள அரசியல் உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய முன்னேற்றங்களை உள்ளடக்கியது

 V-Dem நிறுவனம் 1789 முதல் 2020 வரை, 202 நாடுகளை உள்ளடக்கிய ஜனநாயகம் குறித்த மிகப்பெரிய உலகளாவிய தரவுத்தொகுப்பை வழங்குகிறது.

The Economists Intelligence Unit, 165 நாடுகள் மற்றும் இரண்டு பிரதேசங்களில் ஜனநாயகத்தின் தரத்தை பற்றியும் தற்போதைய நிலைமை பற்றியும் ஒரு அறிவியல் பார்வையையும் புரிதலையும் வழங்குகிறது.

இந்த கவனிப்புகள் ஏதோ போகுற போக்கில் சொல்லுகிற விஷயங்கள் அல்ல.

ஆழ்ந்த கூர் நோக்கும், அறிவியல் முறைகளில் பல்லாயிரக்கணக்கான நிபுணர்களும் வல்லுனர்களும் சேர்ந்து முன் வைக்கும் ஒரு கூட்டு அறிவியல் பார்வை.

தரவரிசையின்படி பார்த்தால், ஜனநாயகம், இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரச்சனையில் இருப்பதாகத் தான்  தோன்றுகிறது.  உலக மக்கள் தொகையில் 68% வசிக்கும் நாடுகளில் தேர்தல் எதேச்சதிகாரங்கள் (ELECTORAL AUTOCACY) தான் இப்பொழுது உள்ளது.

ஆனால், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் ஜனநாயகம் சீர்குலைந்து போவதுதான் பலரை கவலையடையச் செய்கிறது. ஹங்கேரி மற்றும் துருக்கியைத் தொடர்ந்து இந்தியா இதற்கு சமீபத்திய உதாரணம். இந்தியாவை பொறுத்த மட்டும் இவ்வளவு பெரிய மக்கள் தொகையுடன், ஜனநாயகத்தின் வெற்றிகரமான மாதிரியாக கடந்த காலத்தில் தனித்து நின்றிருக்கிறது. தற்போதை நிலைமை 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்குப் பிறகு தான் என்கிறது இந்த எல்லா நிறுவனங்களும்.

ஜனநாயகத்திலிருந்து வழுக்கி எதேச்சதிகாரத்தில் விழுந்து…

தேர்தல் எதேச்சதிகாரம் என்பது ஜனநாயகம் இருக்கு ஆனால் இல்லை” என்ற S J SURYA  ஜோக் மாறிதான். அங்கு ஜனநாயக நிறுவனங்கள் (ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் சட்டமன்றம், அமலாக்கத்துறை, நீதித்துறை மற்றும் ஊடகம்) உள்ளன, ஆனால் அவை சர்வாதிகார முறைகளைப் பிரதிபலிக்கும் வழிகளில் செயல்படுகின்றன.

விவேக் சார் சொல்வது போல "எப்படி இருந்த நான் இப்புடி ஆயிட்டேன்?" என்பது இந்தியாவுக்கு மிகவும் பொருந்தும். எப்படி இருந்த இந்தியா இப்புடி ஆயிடுச்சு. இந்தியா இன்று வெளித்தோற்றத்தில் ஒரு ஜனநாயக நாடு அவ்வளவுதான்; நடைமுறையில், அது மெல்ல மெல்ல ஜனநாயகத்தில் இருந்து வழுக்கி ஒரு எதேச்சதிகார அரசாக மாறி கொண்டிருக்கிறது.

வழுக்கல் ஒண்ணு

அதன் வெளிப்பாடு தான் மத்திய புலனாய்வுப் பணியகம், அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் வருமான வரித் துறை போன்ற "தற்சார்பு" அமைப்புகள், ஆளும் அரசாங்கத்துக்கு அடியாளாக மாறி, திட்டமிட்டு, ஆளும் அரசை  எதிர்ப்பவர் மீது குறிவைத்து தாக்குவது.

ஏப்ரல் 2ம் தேதி, 2021 இல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு, வருமான வரித்துறையினர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் சோதனை நடத்தினர்.

பிப்ரவரி 21, 2021 அன்று, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை எம்பி, மற்றும் வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜியின் கதவைத் தட்டியது சிபிஐ.

செப்டம்பர் 2019 இல், மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது அமலாக்க இயக்குனரகம் பணமோசடி வழக்கு பதிவு செய்தது.

2024 தேர்தலுக்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் தற்போது அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கண்காணிப்பின் கீழ் உள்ள இரண்டு முதல்வர்கள்.

சரியாக ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது இந்த அரசின் சராசரி நிகழ்வாக மாறி விட்டது.

அதே நேரத்தில், 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறிய சாரதா ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகுல் ராய் மீதான விசாரணை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

இதேபோல், 2020 டிசம்பரில் டிஎம்சியில் இருந்து பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி மற்றும் 2019 ஆகஸ்டில் பாஜகவில் இணைந்த  சோவன் சாட்டர்ஜி ஆகியோருக்கு எதிரான வழக்குகளில் விசாரணை முடங்கியுள்ளது.

அடுத்த வழுக்கல்

அடுத்த வழுக்கலுக்குக்கான காரணம், நீதித்துறைக்கான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை:

உயர் நீதிமன்றங்களில் புதிய நீதிபதிகள் நியமனம் மற்றும் ஏற்கனவே உள்ள நீதிபதிகளின் இடமாற்றம் ஆகியவை தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் அனைத்தும் கேள்விக்குரியதாக இருந்தன, ஆனால் நீதிமன்றம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை மற்றும் நீதிபதிகளை இடமாற்றம் செய்ய அமைதியாக அனுமதித்தது.

பெரும் வழுக்கல்: ஊடகங்களைத் தணிக்கை செய்தல்

இந்திய அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் பேச்சு சுதந்திரத்தை வழங்குகிறது. இருப்பினும், REPORTERS WITHOUT BORDERS என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தால் ஆண்டுதோறும் வெளியிடப்பட்ட பத்திரிக்கை சுதந்திர குறியீடு (PRESS FREEDOM INDEX), 2022ல்,  இந்தியா 180 நாடுகளில் 150வது இடத்தைப் பிடித்துள்ளது.

பெரும் வழுக்கல் என்பதற்கு காரணம் இதுதான். இந்திய அதிகாரிகள் வரி விசாரணைகளை ஒரு சாக்குப்போக்காகப் பயன்படுத்தி முக்கியமான செய்தி நிறுவனங்களை குறிவைத்து தாக்குகின்றனர்.

2002 - குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யும் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. சில வாரங்களுக்குப் பிறகு BBC நிறுவனத்தின் மீது வருமான வரி சோதனை ஏவப்பட்டது.

செப்டம்பர் 2020 - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பிப்ரவரியில் நடந்த மதக் கலவரத்தின் போது டெல்லி காவல்துறை நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து ஆகஸ்ட் 2020 இல் வெளியிட்ட அறிக்கை.   

இதன் விளைவாக, இந்தியாவில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அதன் அனைத்து பிரச்சாரம் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை நிறுத்தி, அதன் முழு ஊழியர்களையும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் பணிநீக்கம் செய்தது.

ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களை நிர்வகிக்கும் அதிகாரம் கொண்ட தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 - அப்படியென்றால், அவர்கள் எது உண்மை செய்தி என்கிறார்களோ, அது தான் செய்தி. மற்றதெல்லாம் தூக்கி எறிய அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு. உண்மையை எடுத்து சொல்ல ஒருவராலும் முடியாது

ஆன்டி இந்தியன்

அரசியல் எதிர்ப்பை யாரெல்லாம் வெளிப்படுத்துகிறார்களோ அவர்களை ஆன்டி இந்தியன் என்கிறார்கள், அல்லது அவர்களை கொல்லுதல் போன்ற ஜனநாயகத்துக்கு ஊறு செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

முற்போக்காளர்களான எம்எம் கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் மற்றும் கெளரி லங்கேஷ்கர் ஆகியோரின் படுகொலைகளை நிகழ்த்தியது, ஹிந்து ஜன் ஜக்ருதி சமிதியும் அதன் தாய் அமைப்புமான சனாதன் சன்ஸ்தாவும்தான் என்பது மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. . ஆக மொத்தத்தில் அரசை எதிர்ப்பவர்களை அரசின் அல்லது மக்களின் எதிரிகளாகக் காட்டுகிறார்கள்.

சொல் புத்தி அல்லது சுய புத்தி:

இதை தான், நான் மேற்சொன்ன நிறுவனங்கள் (The Economists Intelligence Unit, V-Dem, Freedom House) தங்களது ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இதை இந்தியாவிற்கு எதிராக பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. இதில் உண்மை உண்டா இல்லையா என்பதை  தான் நாம் ஆராய வேண்டும். இங்குள்ள ஒரு சில ஊடகங்கள் விலைபோனதாலும், ஒரு சில உண்மை பேசும் நிறுவனங்களை ஒடுக்க முற்படுவதாலும், வெளி நாட்டு ஊடகங்கள் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

நாம் என்ன  செய்ய வேண்டும் என்பது தான்  முக்கியமான கேள்விக்குறி.

நமது பொது எதிரியை வீழ்த்த பொது நண்பரை ஆதரிக்க வேண்டும். நமக்குள்ளே தனி தனியாக பிரிந்து கிடக்காமல் ஒற்றுமையாய் எதிரியை வீழ்த்தி, பிறகு நமது வேற்றுமைகளை களைவதே புத்திசாலித்தனம்.

அழுவுணி ஆட்டம் 

சின்ன வயசுல ரோட்டுல விளையாடும்போது, எல்லா வெளயாட்டுலயும் ஒருத்தன் இருப்பான். அவுட் ஆனா ஒத்துக்காம அழுவுணி ஆட்டம் ஆடுவான். பிறரின் வாய்ப்பை கொடுக்காமல், தானே எப்படியாவது திரும்ப திரும்ப வெளயாடணும்ன்னு நெனப்பான். அவன் இருக்குற வரைக்கும் ஆட்டம் நல்லா இருக்காது. அவன ஓரமா ஒக்கார வச்சிட்டு அப்புறம் தான், நல்ல ஆட்டம் சூடு பிடிக்கும்.

இப்பவும் EVM மெஷின் தான் வேணும்னு அடம் பிடிப்பான்;

எதிர்த்து பேசுனா ஆன்டி இந்தியன்னு சொல்லுவான்;

அப்புடியும் தாக்கு புடுச்சா, அமலாக்கத்துறை பாய வைப்பான்;

வருமானவரித்துறையை  சீற வைப்பான்;

சிறையில் அடைப்பான்;

வங்கி கணக்குகளை முடக்குவான்;

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டுவான்; பணம் புடுங்குவான்;

அழுவுணி ஆட்டம் ஆடி கிட்டே இருப்பான்.

ஒரே வழி அவனை ஓரமா ஒக்கார வைக்கிறது தான்.

அழுவுணி ஆட்டம் ஆடுறவனை ஒக்கார வைப்போம் ஓரமா

அப்புறம் தான் உண்மையான ஆட்டம்.

புரிஞ்சுதா? 

சனி, 16 மார்ச், 2024

கோப்ரா விளைவும் செல்பேசியும்

           பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சும்மாவா சொன்னாங்க.

1800 களில் டெல்லியை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது கட்டாயம் இந்தியர்கள் அல்ல, மாறாக விஷ பாம்புகள். பாம்புகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்கள் ரொம்பவே கவலைப்பட்டு அதை கட்டுப்படுத்த ஒரு கவர்ச்சியான திட்டத்தை அமுல்படுத்தினர்.

ஒவ்வொரு இறந்த பாம்புக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது. பாம்படிக்குறதுக்கு காசுனா சும்மா இருப்பாங்களா? எல்லோரும் பாம்புகளை கொன்று காசு பாக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பாம்புகளின் தொல்லை குறைந்தது என ஆங்கிலேயர்கள் நினைத்த போது, மீண்டும் செத்த பாம்பு உடல்கள் இன்னும் அதிகமாக வர ஆரம்பித்ததை கண்டு சந்தேகம் வர ஆரம்பித்தது.

உண்மையை நோண்ட ஆரம்பித்ததும்,  காசுக்காக பலரும் பாம்புகளை வளர்த்து அதன் உடலை கொடுத்து சம்பாதிக்க தொடங்கினர் என்று தெரிந்தது. ஆங்கிலேயர்கள் உடனே அந்த திட்டத்தை கைவிட்டனர். பாம்பு வளர்த்தவர்களும் இனி பாம்புகளால் பலனில்லை என்பதால் அவற்றை வெளியில் விட்டனர். முன்னர் இருந்ததை விட இப்போது பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆங்கிலேயர்களின் 'பாம்பு கொல்லும் கவர்ச்சித் திட்டம்'            திட்டமிடப்படாத மற்றும் விரும்பத்தகாத முடிவுகளை மட்டுமல்ல,   அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டன.

இதை தான் பொருளியல் நிபுணர் Horst Seibert அவர்கள் Cobra effect என்று விளக்குகிறார்.    

இதைப்போலவே வியட்நாமில் எலிகளால் தொல்லை வந்தபோது, அப்போது ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கம் ஒவ்வொரு எலி வாலுக்கும் ஒரு பணத்தொகையை அறிவித்தது. தொடக்கத்தில் குறைவது போலிருந்த எலிகளின் எண்ணிக்கை, எலி வால்களால் காசு பெறுபவர்களின் எண்ணிக்கையை பார்த்தபோது அதிகரிக்கவே செய்தது. காரணம் காசு பெறுவதர்காக எலிகளை மக்கள் வளர்க்க தொடங்கியது தான் காரணம். இறுதியில், திட்டம் கைவிடப்பட்டதும், எலிகளும் கைவிடப்பட்டன. முதலில் இருந்ததை விட எலித்தொல்லை அதிகரித்தது. இதுவும் கோப்ரா விளைவுதான்.

     நாம் ஏன் பாம்புகளையும் எலிகளையும் துணைக்கு அழைக்கணும். நம் பிள்ளைகளை நாமே கோப்ரா விளைவுக்கு உட்படுத்த வில்லையா? புரியலையா? சொல்றேன் கேளுங்க.

கொரோனா வந்து பள்ளிகளுக்கு ஒரு வருட காலம் போக முடியாமல் பெற்றோர் தவித்த போது, பிள்ளைகளெல்லாம் மகிழ்ந்த போது, யாரோ ஒரு புண்ணியவான் ONLINE வகுப்புகளை பற்றி சொல்ல, எல்லா பள்ளிகளும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, GOOGLE SUITE வாங்கி எப்படி கற்றல் நிகழ்வை துண்டு பட்டு விடாமல் காப்பாற்றுவது என்று யோசித்தனர்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றல் நிகழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வயித்த கட்டி வாய கட்டி,  மொபைல் போன் வாங்கி கொடுத்தோம். ஆனால் இன்றைய நிலைமையில், வருகின்ற பெரும்பான்மை பெற்றோர், பிள்ளைகளின் படிப்புக்கு பெரும் தடையாய் இருப்பது, கற்றல் நிமித்தம் நாம் வாங்கி கொடுத்த மொபைல் போன் தான் என்று சொல்லும்போது, அது கோப்ரா விளைவுதான் என்பதை உணர முடிகிறதா?

மொபைல் போன்கள் வாங்கி கொடுத்ததன் மூலம் கற்றல் நிகழும் என்று நினைத்தோம் ஆனால் திட்டமிடப்படாத மற்றும் விரும்பத்தகாத முடிவுகளை மட்டுமல்ல, நமது  எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டன என்று உணர முடிகிறதா?

கிரேக்க தொன்மங்களில், திராய் (TROY) நகரம் வெற்றி கொண்டபின் ஒடிஸியஸ், இதகாவின் அரசனும் கிரேக்க தளபதியுமான இவன் கப்பலில் சாகச பயணத்தை மேற்கொண்டதாக காப்பியம் கூறுகிறது. அவ்வாறு பயணிக்கும்போது, ஒரு சில தீவுகளை கடந்து செல்லும்போது தன்னுடைய மாலுமிகளின் காதில் பஞ்சு வைத்து நன்றாக அடைத்து விடுவானாம்.

காரணம், அந்த தீவுகளில் பறவை உடல் கொண்ட பெண்கள் (SIRENS) அமர்ந்து கொண்டு, தேனினும் இனிய குரலில் பாடுவதை கேட்க கூடாதென்று. அப்படி கேட்டவர்கள், அதில் மயங்கி கப்பலை நிலைகுலைய செய்து விபத்தில் இறந்து விடுவர். அதனால் அவனும் தன் காதுகளை மூடி கொள்வானாம். இருந்தாலும் உள் மனதிற்குள் ஆசை. எப்படியாவது அந்த காந்தர்வ குரலை கேட்க வேண்டும் என்று. அதனால் தன்னை தூணோடு கட்டி கொண்டு, அந்த குரலை கேட்டு விட்டு உடனே தன் காதுகளை அடைத்துக் கொள்வானாம்.

     இன்று நாமும் ஒடிஸியஸ் நிலைமையில் தான் இருக்கிறோம். ஒடிஸியஸ் பறவை பெண்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தான். நாமோ நம் கைகளில் வைத்துள்ள மொபைல் போன்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் தோற்று கொண்டிருக்கிறோம்.  எதற்கு மொபைல் போன் எடுக்கின்றோம் என புரியாமல் பல மணி நேரம் தடவி தடவியே கால விரயம் செய்கிறோம்.

இன்று இந்த சமூக ஊடகங்கள் நம்மை எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை படுத்தி நம்மை மொபைல் போனோடு ஒட்டி இருக்க செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்கின்றன. 

மேலை நாடுகளில், மொபைல் போன் அருகில் இருந்தாலே (அதை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை)  அது பிறரோடு நமது தொடர்பை பாதிக்கும் என்பதை அறிவியல் முறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

  • எத்தனை முறை பிறர் நம்மிடம் பேசும்போது நாம் போன் நோண்டிக் கொண்டு கவன சிதறலை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
  •  நம் நண்பர்களோடு பேசி கொண்டு இருக்கும்போது, போன் வந்தால் தனித்து சென்று விடுவோம். அவர்கள் தனியாய் நிற்பார்கள்.
  • மொபைல் போன் நம் கையில் இருந்தால், அருகில் இருப்பவர் யார் என்பதை கூட நாம் கவனிக்க தவறி விடுகிறோம். பல முறை நானே இதை செய்திருக்கிறேன்.

அப்படி என்ன இருக்கிறது இந்த கருவியில்?

நம்மை நம் சூழலில் இருந்து வேரறுத்து வேற்று மனிதராக்கி விடுகிறதே?

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவோரை கவனித்ததுண்டா?

தங்கம் வென்றவர் முகத்தில் சந்தோஷ கலை தாண்டவமாடும்.

அதே போல் வெண்கலம் வென்றவர் முகத்திலும் உண்மையான சந்தோசம் இருக்கும். காரணம், நல்ல வேளை நமக்கு வெண்கலமாவது கெடச்சுதேன்னு சந்தோசம்.

வெள்ளி பதக்கம் பெற்றவர் சற்று சோகம்மா தான் இருப்பார். கொஞ்சம் முயற்சி எடுத்துருந்தா தங்கம் வாங்கி இருப்பேன் என்ற வருத்தம் அவரிடம் அதிகமாவே இருக்கும்.

இதுதான் எதிர்ச்சிந்தனை.

எதிர்ச் சிந்தனைகள் கடந்த காலத்தில் நிகழாத நிகழ்வுகளைச் சார்ந்து இருப்பதால் - நிகழ்காலத்தில் - நடந்திருக்க முடியாத விஷயங்களை உள்ளடக்கியது.

இதுதான் நம்மை மொபைல் போன்களோடு பொழுது போக்க வைக்கிறது. போன் பேச வில்லை என்றாலும், ஒரு வேளை நமது போஸ்ட்க்கு யாராவது லைக் போட்டு இருப்பாங்களா?

யாராவது ஒரு வேளை பதில் அனுப்பி இருப்பாங்களா?

அந்த ஆன்லைன் விளையாட்டுல வேற யாராவது நம்ம லெவல் தாண்டி இருப்பாங்களா?

நமக்கு தெரியாத செய்தி எதுவும் 'ஒரு வேளை' வைரல் ஆகி இருக்குமோ?

இப்படி பற்பல ஒரு வேளை இப்படியோ.. ஒரு வேளை அப்படியோ ... போன்ற எதிர்ச்சிந்தனை தான் அந்த கருவியை நாம் பயன் படுத்த வில்லையென்றாலும், நமது கவனத்தை திசை திருப்பி நம்மை சமுதாய தொடர்பிலிருந்து துண்டிக்க செய்கிறது.

இப்படிப்பட்ட அடிமை படுத்தும் தொல்லைகளில் இருந்து விமோச்சனம் உண்டா?

கட்டாயம் உண்டு. விரைவில் சந்திப்போம்.