சனி, 16 மார்ச், 2024

கோப்ரா விளைவும் செல்பேசியும்

           பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சும்மாவா சொன்னாங்க.

1800 களில் டெல்லியை ஆண்டு கொண்டிருந்த ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது கட்டாயம் இந்தியர்கள் அல்ல, மாறாக விஷ பாம்புகள். பாம்புகளின் எண்ணிக்கை அதிகமானதால் அவர்கள் ரொம்பவே கவலைப்பட்டு அதை கட்டுப்படுத்த ஒரு கவர்ச்சியான திட்டத்தை அமுல்படுத்தினர்.

ஒவ்வொரு இறந்த பாம்புக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது. பாம்படிக்குறதுக்கு காசுனா சும்மா இருப்பாங்களா? எல்லோரும் பாம்புகளை கொன்று காசு பாக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பாம்புகளின் தொல்லை குறைந்தது என ஆங்கிலேயர்கள் நினைத்த போது, மீண்டும் செத்த பாம்பு உடல்கள் இன்னும் அதிகமாக வர ஆரம்பித்ததை கண்டு சந்தேகம் வர ஆரம்பித்தது.

உண்மையை நோண்ட ஆரம்பித்ததும்,  காசுக்காக பலரும் பாம்புகளை வளர்த்து அதன் உடலை கொடுத்து சம்பாதிக்க தொடங்கினர் என்று தெரிந்தது. ஆங்கிலேயர்கள் உடனே அந்த திட்டத்தை கைவிட்டனர். பாம்பு வளர்த்தவர்களும் இனி பாம்புகளால் பலனில்லை என்பதால் அவற்றை வெளியில் விட்டனர். முன்னர் இருந்ததை விட இப்போது பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஆங்கிலேயர்களின் 'பாம்பு கொல்லும் கவர்ச்சித் திட்டம்'            திட்டமிடப்படாத மற்றும் விரும்பத்தகாத முடிவுகளை மட்டுமல்ல,   அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டன.

இதை தான் பொருளியல் நிபுணர் Horst Seibert அவர்கள் Cobra effect என்று விளக்குகிறார்.    

இதைப்போலவே வியட்நாமில் எலிகளால் தொல்லை வந்தபோது, அப்போது ஆட்சி செய்த பிரெஞ்சு அரசாங்கம் ஒவ்வொரு எலி வாலுக்கும் ஒரு பணத்தொகையை அறிவித்தது. தொடக்கத்தில் குறைவது போலிருந்த எலிகளின் எண்ணிக்கை, எலி வால்களால் காசு பெறுபவர்களின் எண்ணிக்கையை பார்த்தபோது அதிகரிக்கவே செய்தது. காரணம் காசு பெறுவதர்காக எலிகளை மக்கள் வளர்க்க தொடங்கியது தான் காரணம். இறுதியில், திட்டம் கைவிடப்பட்டதும், எலிகளும் கைவிடப்பட்டன. முதலில் இருந்ததை விட எலித்தொல்லை அதிகரித்தது. இதுவும் கோப்ரா விளைவுதான்.

     நாம் ஏன் பாம்புகளையும் எலிகளையும் துணைக்கு அழைக்கணும். நம் பிள்ளைகளை நாமே கோப்ரா விளைவுக்கு உட்படுத்த வில்லையா? புரியலையா? சொல்றேன் கேளுங்க.

கொரோனா வந்து பள்ளிகளுக்கு ஒரு வருட காலம் போக முடியாமல் பெற்றோர் தவித்த போது, பிள்ளைகளெல்லாம் மகிழ்ந்த போது, யாரோ ஒரு புண்ணியவான் ONLINE வகுப்புகளை பற்றி சொல்ல, எல்லா பள்ளிகளும் ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு, GOOGLE SUITE வாங்கி எப்படி கற்றல் நிகழ்வை துண்டு பட்டு விடாமல் காப்பாற்றுவது என்று யோசித்தனர்.

நாமும் நம் பிள்ளைகளுக்கு கற்றல் நிகழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வயித்த கட்டி வாய கட்டி,  மொபைல் போன் வாங்கி கொடுத்தோம். ஆனால் இன்றைய நிலைமையில், வருகின்ற பெரும்பான்மை பெற்றோர், பிள்ளைகளின் படிப்புக்கு பெரும் தடையாய் இருப்பது, கற்றல் நிமித்தம் நாம் வாங்கி கொடுத்த மொபைல் போன் தான் என்று சொல்லும்போது, அது கோப்ரா விளைவுதான் என்பதை உணர முடிகிறதா?

மொபைல் போன்கள் வாங்கி கொடுத்ததன் மூலம் கற்றல் நிகழும் என்று நினைத்தோம் ஆனால் திட்டமிடப்படாத மற்றும் விரும்பத்தகாத முடிவுகளை மட்டுமல்ல, நமது  எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளையும் ஏற்படுத்தி விட்டன என்று உணர முடிகிறதா?

கிரேக்க தொன்மங்களில், திராய் (TROY) நகரம் வெற்றி கொண்டபின் ஒடிஸியஸ், இதகாவின் அரசனும் கிரேக்க தளபதியுமான இவன் கப்பலில் சாகச பயணத்தை மேற்கொண்டதாக காப்பியம் கூறுகிறது. அவ்வாறு பயணிக்கும்போது, ஒரு சில தீவுகளை கடந்து செல்லும்போது தன்னுடைய மாலுமிகளின் காதில் பஞ்சு வைத்து நன்றாக அடைத்து விடுவானாம்.

காரணம், அந்த தீவுகளில் பறவை உடல் கொண்ட பெண்கள் (SIRENS) அமர்ந்து கொண்டு, தேனினும் இனிய குரலில் பாடுவதை கேட்க கூடாதென்று. அப்படி கேட்டவர்கள், அதில் மயங்கி கப்பலை நிலைகுலைய செய்து விபத்தில் இறந்து விடுவர். அதனால் அவனும் தன் காதுகளை மூடி கொள்வானாம். இருந்தாலும் உள் மனதிற்குள் ஆசை. எப்படியாவது அந்த காந்தர்வ குரலை கேட்க வேண்டும் என்று. அதனால் தன்னை தூணோடு கட்டி கொண்டு, அந்த குரலை கேட்டு விட்டு உடனே தன் காதுகளை அடைத்துக் கொள்வானாம்.

     இன்று நாமும் ஒடிஸியஸ் நிலைமையில் தான் இருக்கிறோம். ஒடிஸியஸ் பறவை பெண்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தான். நாமோ நம் கைகளில் வைத்துள்ள மொபைல் போன்களிடம் இருந்து தப்பிக்க முயன்றும் தோற்று கொண்டிருக்கிறோம்.  எதற்கு மொபைல் போன் எடுக்கின்றோம் என புரியாமல் பல மணி நேரம் தடவி தடவியே கால விரயம் செய்கிறோம்.

இன்று இந்த சமூக ஊடகங்கள் நம்மை எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை படுத்தி நம்மை மொபைல் போனோடு ஒட்டி இருக்க செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்கின்றன. 

மேலை நாடுகளில், மொபைல் போன் அருகில் இருந்தாலே (அதை பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை)  அது பிறரோடு நமது தொடர்பை பாதிக்கும் என்பதை அறிவியல் முறையில் நிரூபித்திருக்கிறார்கள்.

  • எத்தனை முறை பிறர் நம்மிடம் பேசும்போது நாம் போன் நோண்டிக் கொண்டு கவன சிதறலை ஏற்படுத்தி இருக்கின்றோம்.
  •  நம் நண்பர்களோடு பேசி கொண்டு இருக்கும்போது, போன் வந்தால் தனித்து சென்று விடுவோம். அவர்கள் தனியாய் நிற்பார்கள்.
  • மொபைல் போன் நம் கையில் இருந்தால், அருகில் இருப்பவர் யார் என்பதை கூட நாம் கவனிக்க தவறி விடுகிறோம். பல முறை நானே இதை செய்திருக்கிறேன்.

அப்படி என்ன இருக்கிறது இந்த கருவியில்?

நம்மை நம் சூழலில் இருந்து வேரறுத்து வேற்று மனிதராக்கி விடுகிறதே?

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்குவோரை கவனித்ததுண்டா?

தங்கம் வென்றவர் முகத்தில் சந்தோஷ கலை தாண்டவமாடும்.

அதே போல் வெண்கலம் வென்றவர் முகத்திலும் உண்மையான சந்தோசம் இருக்கும். காரணம், நல்ல வேளை நமக்கு வெண்கலமாவது கெடச்சுதேன்னு சந்தோசம்.

வெள்ளி பதக்கம் பெற்றவர் சற்று சோகம்மா தான் இருப்பார். கொஞ்சம் முயற்சி எடுத்துருந்தா தங்கம் வாங்கி இருப்பேன் என்ற வருத்தம் அவரிடம் அதிகமாவே இருக்கும்.

இதுதான் எதிர்ச்சிந்தனை.

எதிர்ச் சிந்தனைகள் கடந்த காலத்தில் நிகழாத நிகழ்வுகளைச் சார்ந்து இருப்பதால் - நிகழ்காலத்தில் - நடந்திருக்க முடியாத விஷயங்களை உள்ளடக்கியது.

இதுதான் நம்மை மொபைல் போன்களோடு பொழுது போக்க வைக்கிறது. போன் பேச வில்லை என்றாலும், ஒரு வேளை நமது போஸ்ட்க்கு யாராவது லைக் போட்டு இருப்பாங்களா?

யாராவது ஒரு வேளை பதில் அனுப்பி இருப்பாங்களா?

அந்த ஆன்லைன் விளையாட்டுல வேற யாராவது நம்ம லெவல் தாண்டி இருப்பாங்களா?

நமக்கு தெரியாத செய்தி எதுவும் 'ஒரு வேளை' வைரல் ஆகி இருக்குமோ?

இப்படி பற்பல ஒரு வேளை இப்படியோ.. ஒரு வேளை அப்படியோ ... போன்ற எதிர்ச்சிந்தனை தான் அந்த கருவியை நாம் பயன் படுத்த வில்லையென்றாலும், நமது கவனத்தை திசை திருப்பி நம்மை சமுதாய தொடர்பிலிருந்து துண்டிக்க செய்கிறது.

இப்படிப்பட்ட அடிமை படுத்தும் தொல்லைகளில் இருந்து விமோச்சனம் உண்டா?

கட்டாயம் உண்டு. விரைவில் சந்திப்போம்.

வியாழன், 7 மார்ச், 2024

பெண்களை கொண்டாடுவோம்

‘விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

என்ற பாரதியின் வரிகளை படிக்க படிக்க உள்ளம் குமுறுகிறது.

பாரதியும், பாரதிதாசனும், பெரியாரும் இன்னும் பற்பல சான்றோரின் போராட்டத்தில் பிறந்தது தான் இந்த மண்ணின் பெண் விடுதலை. ஆனால் இன்று பெண்களை பிள்ளையாய் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டி கொண்டல்லவா இருக்கின்ற காலம் இது.

மார்ச் 8ம் தேதி வந்து விட்டது. பெண்கள் தினத்தை பற்றி வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களும் போஸ்ட்களும் வந்து குவியும்.

அரசு பல்வேறு நிகழ்வுகளை அரங்கேற்றும்.

டிவி க்களும் பெண்களை போற்றி சிங்கப்பெண்ணே’ என்று ஒரு பக்கம் உணர்ச்சி பொங்க வைத்து மக்களை கண்ணீரில் மூழ்கடிக்கும்.

பள்ளிகளிலும் அலுவலகங்களிலும் பெண்களை சிறப்பாக மரியாதை செய்வார்கள். அவர்களும் ஒரே வண்ண புடவையில் வந்து தங்களின் பெண்மையை வெளிப்படுத்தி மகிழ்வார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, விளம்பரங்களும் வியாபாரங்களும் பெண்ணை விண்ணுக்கு உயர்த்தி விலை பேசி கொண்டிருக்கும்.

24 மணி நேரத்துக்கு பிறகு என்ன நடக்கும் என்பதே என்னுடைய ஆச்சர்யம்.

‘பெண் பின் தூங்கி முன் எழுவாள்

கணவனுக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் வழக்கம் போல் சமையல், வீடு வேலை, பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல். இன்னும் மார்ச்இல் செய்த அதே routine க்கு திரும்பி இருக்க வேண்டும். அடுத்த மரியாதை அடுத்த மார்ச் 8 இல் கிடைக்கும்.

வேலை பார்க்கும் இடங்களில் பெண் வழக்கம் போல் ஒரு காட்சி பொருளாக பார்க்கப்படுவாள். அவள் உழைப்பால் உயர்ந்தாலும் அதை உள்ளர்த்ததோடு தான் ஆண்கள் புரிந்து கொள்வார்கள். பெண் முன்னுக்கு வந்தால் அது அவள் அழகினால் மட்டும்தான் என்று நம்புவார்கள்.

சிங்கப்பெண்ணே’ என்று வரிந்து கட்டிய டிவி க்கள் இன்னுமொரு ஹாசினி, இன்னுமொரு ஆர்த்தி’ என்று பெண் வன்புணர்ச்சியை விவாதப்பொருளாக TRP ஏற்ற முயற்சித்து கொண்டு இருக்கும்.

என்ன தான் செய்ய வேண்டும்? என்று கேட்கிறீர்களா?

வருடம் தவறாமல் பெண்கள் தினம் கொண்டாடுபவர்களே!

இனிமேல் தினங்களை விட்டு விட்டுக்

பெண்களை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?


அவர்களின் வீட்டு  வேலையை பகிருங்கள்.

அவர் துணி துவைத்தால், நீங்கள் காய போடுங்கள்

அவர் துணி மடித்தால், நீங்கள் அடுக்கி வையுங்கள்

அவர் சமையல் செய்தால், வேண்டிய பொருட்களை வெட்டி கொடுங்கள்

குறைந்தது அவரோடு கூடவாவது நில்லுங்கள்

 எப்ப பாரு சாம்பார் தானா என்று குறை சொல்லாமல் கூட நின்னு சமைத்து பாருங்கள்.

 என்ன சமைப்பது என்று யோசிப்பது, சமைப்பதை விட எவ்ளோ கஷ்டம் என்று அப்போது புரியும். 

இன்னும் பல ஆண்களுக்கு எது பாசி பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு என்ற வித்தியாசம் கூட தெரியாது. சமையலறை என்ற உலகத்துக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம். 

'சமைப்பதும் வீட்டுவேலை

சலிப்பின்றிச் செயலும் பெண்கள்

தமக்கேஆம் என்று கூறல்

சரியில்லை ஆடவர்கள்

நமக்கும் அப் பணிகள் ஏற்கும்

என்றெண்ணும் நன்னாள் காண்போம்

சமைப்பது தாழ்வா இன்பம்

சமைக்கின்றார் சமையல் செய்வார்'

 பாரதிதாசன்அன்றே சொன்னார் ஆண்களும் வீட்டு வேலைகளை ஏற்கும் நன்னாள் வரவேண்டும் என்று. அது தான் உண்மையான பெண்மையின் கொண்டாட்டம். 

அவர் பாத்திரம் கழுவினால், அதை வாங்கி துடைத்து, வைக்க வேண்டிய இடத்தில் வைய்யுங்கள்

அவரோடு சேர்ந்து வீடு துடையுங்கள்

ஒட்டடை அடியுங்கள்

கடைக்கு போங்கள் 


அலுவலகத்தில், பெண்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குங்கள்

வளர வழிவிடுங்கள்

அவர்களின் உடையையோ உடலையோ குறித்து சொல்லாடல்களை தவிருங்கள்

நமது வீட்டு பெண் அங்கு வேலை செய்தால் எவ்வாறு நடத்த பட வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை போல் மற்ற பெண்களையும் நடத்துங்கள்.

ஒரு பெண், எந்த ஆண் மகனிடம் பயமின்றி மனம் விட்டு சிரித்து பேசி அருகில் நிற்கின்றாலோ, அவன் தான் உண்மையான ஆண் மகன் என்பதை உணருங்கள். அந்த நம்பிக்கையை ஒருபோதும் உடைக்காதீர்கள்.  

பெண் சிரித்து பேசி விட்டால், அவளின் கற்பை கொச்சை படுத்தாதீர்கள்.

 பெண்ணறத்தனை ஆண்மக்கள் வீரந்தான்

பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை

கண்ணைக் காக்கும் இமை மிரண்டின்மை போலவே

பெண்ணின் பெருமையை, பெண்ணின் நலனை, பெண்ணின் சுயமரியாதையை,  ஆண்மக்கள் காக்க வேண்டும். அதனால் ஆண்மை தாழ்ச்சி அடையப்போவதில்லை. கண்ணை இமை காப்பதால் இமைக்கென தாழ்ச்சியா?

இந்த பெண்கள் தினத்தில் 

ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் 

பெண்ணை எப்படி மரியாதையோடு 

நடத்த வேண்டும் என சொல்லாதீர்கள் 

செய்து காட்டுங்கள் 

உங்கள் வாழ்க்கை 

உங்கள் வார்த்தையை விட வலிமையானது 


பெண்ணுக்கு நல்ல தொடுதல் தீய தொடுதல் சொல்லி கொடுப்பதற்கு பதில்,

பெண்ணை அனாவசியமாய் தொடாதே 

மரியாதையை நடத்து என்பதை ஆண் பிள்ளைகளுக்கு வாழ்ந்து காட்டுவோம் 


பெண்களை மதிப்போம், கொண்டாடுவோம்

மார்ச் 8 இல் மட்டும் அல்ல எல்லா நாளும்.

பெண்கள் தினத்தை விட்டு விட்டு பெண்களை கொண்டாடுவோம்