சனி, 30 மே, 2026

எனது சுயரூபங்கள் (Adaptation of 'Seven Selves' from "The Madman" by Khalil Gibran)

நள்ளிரவு ...

ஆழ்ந்த இருள் ...

கண்ணை திறந்தாலும், மூடினாலும் வித்தியாசமில்லா இருள் ...

அரை தூக்கத்தில், மின் துண்டிப்பால் புரண்டு கொண்டிருந்தேன்

அப்போது ...

எனது ஏழு சுயரூபங்களும் என்னை சுற்றி அமர்ந்து, எனக்கு கேட்காதவாறு பேசிக் கொண்டிருந்ததை, நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 


அதில் முதலாமவன் 'வலி' பேசினான்:


இந்த பித்தனின் உடலோடு இத்தனை ஆண்டுகள் உடனிருந்தேன். எத்தனை எத்தனை வலிகள்? எவ்வளவு துன்பங்கள்? உடல் வலி, உள்ள வலி என்று உழன்று கொண்டு இவனுக்கு வலி உண்டாக்குவதே எனது பணி. துன்பம் சமைப்பதே எனது தொழில். எதை சாதித்தேன்? துயர், அல்லல், வேதனை, இன்னல், இடர், கஷ்டம், கவலை, சோகம். துக்கம், வருத்தம், இடும்பை என இவனுக்கு வகை வகையாய் துன்பம் தந்ததை விட என்னத்த கண்டேன் இந்த வாழ்க்கையிலே?

இவனை விட்டு வெளியேற, நான் தான் தகுதியானவன்


இரண்டாமவன், 'மகிழ்ச்சி':


 

உனது வாழ்க்கை பரவாயில்லை

எனது தலைவிதியைப் பார்.

அவன் சிரிக்கும்போது நான் சிரிக்க வேண்டும்.

தலை கால் புரியாமல் குதிக்கும்போது, நான் குதிக்க வேண்டும்.

மகிழும்போது, மகிழ வேண்டும்.

திளைக்கும்போது, திளைக்க வேண்டும்.

புதிய புதிய மகிழ்ச்சிகளை உருவாக்கி இவனை மகிழ்விப்பதே எனது பணி.

அது அவ்வளவு எளிதல்ல. எதற்கும் எளிதில் மகிழ தெரியாத ஜென்மம் இது.

இவனை மகிழ்விப்பதற்குள், என் வாழ்நாள் முடிந்து விடும் போலிருக்கிறது.

என்னை போக விடுங்கள் முதலில்.


மூன்றாமவன், 'அன்பு' கோபத்தில் கொப்பளித்தான்:


 

உங்களுடையதெல்லாம் ஒரு பிரச்னையா?

அன்பு

பற்ற வைத்தால் பற்றாத...

அணைத்தால் அணையாத....

ஓர் வினோத நெருப்பு.

இவன் அன்பு தீயில் பற்றி எரியும்போது, நானும் உடனெறிகிறேன்.

இவனுடைய அன்பின் தேவைகளை...

பேரார்வமாய்

காதலாய்

காமமாய்

ஆழ்மன வேட்கைகளாய்

சொல்லொணா பேரவவாய்

அதீத பொருட் பற்றாய்

ஆற்றமுடியா இச்சைகளாய்

மனவெழுச்சிகளாய் இவனை பராமரிப்பது எனது வேலை.

இவனுடன் வாழ்வதே ஒரு நரகம்.

நான் முதலில் வெளியே போகிறேன்.

 

நான்காமவன், 'வெறுப்பு' வெறுப்புடன் சொன்னான்:


அப்பப்பா, இவனோடு வாழ்வது, தீவிர எதிர்மறை உணர்ச்சியான எனக்கே அலுப்பு தட்டுகிறது. உங்கள் அனைவரையும் ஒப்பிடும்போது, சற்று யோசித்துப் பாருங்கள் எனது பணியை.

வெறுப்பையும், காழ்ப்புணர்வையும், கேடு விளைவிக்கும் சிந்தனைகளையும், பாழ் படுத்தும் பல திட்டங்களையும் இவனுக்கு கொடுப்பதே என் வேலை. இவன் புறத்தோற்றம் உங்களுக்கு இனிதாய் இருக்கலாம், ஆனால் இவனுடைய அகம் எனக்கு மட்டுமே தெரியும். அகத்தின் அழகு, முகத்தில் மட்டும் தெரிந்தால், அவ்வளவுதான், ஒருத்தரும் இவன் பக்கம் வர கூட மாட்டார்கள். அப்பப்பா... சொல்லவே வாய் கூசுகிறது.

என்னை அனுமதியுங்கள் முதலில் இவனை விட்டு விலக.


ஐந்தாமவன் சிரித்தான், அவன்தான் 'சிந்தனை'


 

நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப சரிதான்.

ஆனால் ஒன்னு யோசிச்சீங்களா? (ஹாஹாஹா அதுதான் உங்களால முடியாதே)

ஏன்னா? அதுதான் என்னோட வேலை.

நான் சிந்தனைகளை புதிது புதிதாக உருவாக்குவதால தான், உங்கள் வேலைகளை பற்றி நீங்க யோசிக்குறீங்க. உங்கள் வேலைகளும் உங்களுக்கு அர்த்தம் தருது. அதே சமயம் அலுப்பும் தட்டுது. இது  எல்லாமே என் வேலை தான்.

சிந்திக்கும் திறன்

படைக்கும் திறன்

புதுமைக்கான தாகத்தை உருவாக்கும் திறன்

ஓய்வற்ற நித்திய தேடலில் எப்போதும் அலைபவன் நான்

இன்னும் இருத்தலுக்கு உட்படாத

புதிரான படைப்புகளை

தேடி தேடி அலைபவன் நான்

எனக்கு ஓய்வென்பதே இவனோடு இருக்கும் மட்டும் இல்லவே இல்லை

இவனை விட்டு ஒழிவது ஒன்றே எனக்கான வழி     

 

ஆறாமவன், 'உழைப்பு' கண்ணீரோடு மல்கினான்.

 


'சிந்தனை' சொல்வதும் சரிதான்.

சிந்தனை இல்லையென்றால் வேறு எந்த செயலும் பயனளிக்காது.

ஆனால் ஒன்றை யோசித்தீர்களா?

சிந்தனைக்கு உருவம் கொடுப்பது நான் தான் 'உழைப்பு'

சிந்திப்பதை கைகளால் உருவாக்குவது நான் தான்.

சிந்தையில் உள்ள விந்தைகளை சந்தைப்படுத்துவது நான் தான்.

எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றுவது 'உழைப்பு' தான்.

ஆக, உங்கள் எல்லாரையும் விட இந்த பித்தனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது நான் தான்.

எதையாவது செய்துகொண்டே இருப்பான்.

எதையாவது உருவாக்கி கொண்டே இருப்பான்.

இவனிடம் இருந்து விலகி இருப்பது எனக்கே ரொம்ப அவசியம்.

 

ஏழாமவன், எதுவும் சொல்லாமல், வெறுமையாய் 'வெளியை' வெறித்துக் கொண்டிருந்தான்.

அறுவரும், அவனை தட்டி அழைத்து, நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?, என்றனர்.

 


அவன் திரும்பி, நீங்கள் அனைவரும் புலம்பி தீர்ப்பதைப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது என்றான்.

ஏன் தெரியுமா?

தூங்கி கொண்டிருக்கிறானே இவனுடைய வாழ்க்கையில் உங்கள் அனைவருக்கும் செய்யவேண்டிய ஏதோ ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் 'வெறுமை'. எனக்கென்று எந்த ஒரு பணியுமல்ல.

 எப்போதெல்லாம் இவன் துன்பப்படவில்லையோ...

எப்போதெல்லாம் இவன்மகிழவில்லையோ

எப்போதெல்லாம் இவன் அன்பு காட்டவில்லையோ

எப்போதெல்லாம் வெறுப்பை உமிழ வில்லையோ

எப்போதெல்லாம் சிந்திக்கவில்லையோ

எப்போதெல்லாம் உழைக்கவில்லையோ

 அப்போதெல்லாம் இவன் செய்தது ஒன்றே ஒன்றுதான் 

'வெறுமையாய்' அமர்ந்திருந்தான்.

அவனோடு நானும் அமர்ந்திருந்தேன்.

நீங்கள் அனைவரும் செய்யும் பணிக்காக சலித்துக் கொள்கிறீர்கள்

நான் ஒன்றும் செய்யாமல், இவன் உடனிருக்க, சகிக்க முடியாமல் உங்கள் முன் நிற்கிறேன்.

ஜன்னலைப் பார்த்தபடி

விட்டத்தை பார்த்தபடி

சுவரை பார்த்தபடி

வானத்தை பார்த்தபடி

மரத்தை செடியை நாயை நரியை

பார்த்தது பார்த்தபடி 'வெறுமையாய்' உட்கார்ந்திருக்கிறானோ,

அவனோடு நானும் 'வெறுமையாய்' உட்காருவதுதான் எனது வேலை.

சும்மா இருப்பது கடினம்

சும்மாவே வாழ்நாள் முழுதும் இருப்பது?

யோசியுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும், அவனுடைய வாழ்க்கையை புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, நான் மட்டும் தனியனாய், வெறுமையாய், எதையும் செய்யாமல் சும்மாவே இருக்க வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்: யார் உண்மையில் வெளியேற வேண்டும் என்று?


முதலில் பேசிய, ஆறு சுய ரூபங்களும், இவனது நிலைமையை கண்டு, தங்களுக்குள் வருத்தப்பட்டு, மீண்டும் தங்கள் பணியை தொடர என்னோடு வந்து உறங்கிப்போயின.

'வெறுமை' மட்டும் தனியனாய், வெறுமையை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது.

தவற விட்டதையெல்லாம்

தவறாமல் நினைவு படுத்துவது

தனிமை தான் 

 

தனிமை வெறுமையின் உடன் பிறப்பு

 தனிமை தருவது இரண்டு பெரும் கொடைகள்:

விடுதலை

காலையில் நாம் எழுந்துவிட்டோமா? என கேட்கவும்

இரவு தூங்கு முன் தேடுவதற்கும் ஒருவரும் இல்லையென்றால்

அதை என்னவென்று சொல்வது: தனிமையா? விடுதலையா?

 

பாதுகாப்பு

பிறர் நம்மை புரிந்துகொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் இருந்து

பாதுகாப்பது, தனிமை தரும் இன்னொரு கொடை.


தூங்கும் எனக்கு மட்டும் தான் தெரியும்; 'வெறுமையும்' என்னை விட்டு போகாது என்று.  

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

சோளக்காட்டு பொம்மை (Adaptation of 'The Scarecrow' by Khalil Gibran - 'The Madman')

கடந்த வருடம்...


வயல்வெளி ரசித்து கடந்து போகையில் 

தன்னந்தனியனாய் நின்றிருந்தாய் 

பயம் காட்டும் சோளக்காட்டு பொம்மையாய் 



சற்றே அருகே போய் பார்த்தேன் பயத்தோடு 

யாரை பயமுறுத்த நின்றிருக்கிறாய் என்றேன் 

பறவைகளையும் குருவிகளையும் தான் என்றாய் 


ஓ அது சரி அது சரி கேட்க நினைத்தேன் 

தனிமையில், ராவும் பகலுமாய், மழையிலும் வெயிலிலும் 

பொறுமையாய் நின்றிருக்க வலிக்கவில்லையா என்றேன் 


எனது பயணம் தெளிவாக இருக்கும்போது வலி ஏது?

பயமுறுத்தி மகிழ்வதன் இன்பம் அலாதி, என்றாய் 

நானும் அரை நிமிட அமைதிக்குப்பின் ஆமோதித்தேன் 


உனக்கும் பயம் தருவது இன்பமா? என்றாய்

'வாய்ப்பே இல்லை' என ஏளனமாய் சிரித்தாய் 

இதயம் அற்ற வெற்று உடலுக்கே அது சாத்தியம் என்றாய் 


பொம்மை சொன்ன வார்த்தைகள் உண்மை பேசியதை உணர்ந்தேன் 

அவனிடமிருந்து விலகி வந்து சற்றே யோசித்தேன் 

அது புகழ்ச்சியா? இகழ்ச்சியா? இல்ல வஞ்சப்புகழ்ச்சியா?


மீண்டும் ஓர் ஆண்டு கழிந்து ...


மீண்டும் வயல் கடந்து போகையில் அதே வயலில் சந்தித்தேன் 

பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை அவனிடம் அந்த ஒன்றை தவிர 

அவன் கழுத்துக்கு கீழ் ஓர் 'குருவிக்கூடு'


இதயமற்ற வெற்றுடலுக்கே இரக்கம் துளிர்க்குமெனில் 

சோளக்காட்டு பொம்மையே அன்பு காட்டுமெனில் 

இதயம் கொண்ட எனக்கு என்ன தகுதி இல்லை?





 

செவ்வாய், 31 மார்ச், 2026

'இயேசு உள்ளம் கலங்கியவராய்...'

என்னை பொறுத்தவரை…

திருச்சபை வாசகங்களில் மிகவும் சோகமானது; கனமானது; உணர்ச்சி மேலீடானது.

புனித வாரத்தின் செவ்வாய்க் கிழமையின் நற்செய்தி தான்,

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 21-33, 36-38

'தம் சீடர்களுடன் பந்தியமர்ந்த இயேசு உள்ளம் கலங்கியவராய், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.'

இந்த பகுதி மிகவும் நெஞ்சை உருக்கும் பகுதி.

'இயேசு உள்ளம் கலங்கியவராய்...',

இறை மகனையே கலங்கடித்த பெருமை மனித குலத்துக்கு மட்டும் தான் உண்டு. என்னதான் இறை மகன் என்றாலும், அவர் முழுதும் மனிதராய் வாழ்ந்தார்.

தன்னோடு மூன்று வருடங்கள்,

உடன் இருந்து வாழ்ந்து,

உடன் நடந்து நற்செய்தி போதித்து,

குருடரை பார்க்க செய்து

செவிடரின் காது திறக்க செய்து

நோய்வாய் பட்ட பலரை குணமாக்கி

முடவரை நடக்க செய்து

இறந்தோரை உயிர்க்க செய்து

தண்ணீரை திராட்சை ரசமாக்கி

ஐந்து அப்பங்களை பலுகச் செய்து

புடலை அடக்கி

நீர் மேல் நடந்து  ,

உடன் உண்டு, உடன் உறங்கி, உடன் கதைத்து, உடன் சிந்தித்து வந்த,

தன்னுடைய சொந்த சீடருள் ஒருவர் தன்னை

இறப்புக்கு கையளிக்க முன் வந்துள்ளதை அறிந்து,

எப்படி கலங்காமல் இருக்க முடியும்?

எவ்வளவு பெரிய துரோகம் இது? இயேசுவின் உளக்குமுறலை உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்ற சொற்களின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

அடுத்து வருகின்ற பகுதி இன்னும் வேதனைக்குரியது: 'யாரைப்பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்.'

ஏன் ஒருவரும் ஒருவரையும் சந்தேகப்படவில்லை; ஏன் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள்?

அங்கு இருந்த சீடர்கள் அனைவருமே, இயேசுவை காட்டிக்கொடுக்க தகுதியுள்ள மனிதராகத்தான் இருந்தார்கள். நமக்கு கிடைத்தது பேதுருவும், யூதாசும் தான். வாய்ப்பு கிடைத்திருந்தால், அனைவருமே காட்டிக்கொடுப்பவர் தாம்.

 இந்த நற்செய்தியின், ஒரு திருப்பு முனையே பின் வரும் இறை வார்த்தை தான் என்று நான் நினைக்கிறன்:

'அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார். அவன் அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்'.

 இயேசு இதை என் நினைவாக செய்யுங்கள் என்று தனது உடலையும் குருதியையும் அளித்தும், 'அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்'

இந்த இறைவார்த்தை நம்மை வெகுவாய் குழப்புகிறது தானே? யேசுவிடமிருந்து அப்பத்தை பெற்றாலும், சாத்தான் நம் உள்ளத்துக்குள் நுழைவது என்பது சாத்தியம் என்று புரிகிறது.

நற்கருணை பெற்றாலும் நாம் எப்படி வாழ்கிறோம்? அதற்கு போவதற்கு முன், நாம் அன்றாடம் உண்ணும் உணவின் நோக்கத்தை பார்ப்போம்.

உண்ட உணவின் செரிமானம் வாயிலேயே தொடங்குகிறது. நீங்கள் மெல்லத் தொடங்கி, உணவைச் செரிக்கும் அளவுக்குச் சிறிய துண்டுகளாக உடைக்கும்போது, ​​உங்கள் வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. இந்த உமிழ்நீரில் உள்ள ஒரு பொருள், அந்த உணவுத் துகள்களை உங்கள் உடல் உறிஞ்சிப் பயன்படுத்தக்கூடிய ஒரு வடிவமாக உடைக்கும் செயல்முறையைத் தொடங்குகிறது.

நம் உடல் உணவைச் செரிப்பதற்குப் பல மணிநேரம் ஆகலாம். பொதுவாக, உணவு வயிற்றில் 40 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை இருக்கும். பின்னர் அது சிறுகுடலில் சுமார் 2 முதல் 6 மணி நேரம் செலவழித்து, அதன் பிறகு பெருங்குடலைக் கடந்து செல்கிறது; இந்தப் பயணத்திற்கு 10 முதல் 59 மணி நேரம் வரை ஆகலாம். 

உணவு சென்று சேரும் இரைப்பையானது சக்திவாய்ந்த அமிலத்தையும் நொதிகளையும் சுரக்கிறது. இவை உணவைத் திரவமாகவோ அல்லது கூழாகவோ மாற்றுவதன் மூலம், அதை மேலும் சிதைக்க உதவுகின்றன. இங்கிருந்து, அந்த உணவு சிறுகுடலுக்கு நகர்த்தப்படுகிறது.

சிறுகுடல் என்பது செரிமானத்தின் முக்கியப் பங்காற்றும் பகுதியாகும், ஏனெனில் நம் உணவில் உள்ள பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் இங்குதான் நமது இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகின்றன.

 ஆக, உண்ணுகின்ற உணவு

நம்மில் ஏதேனும் மாற்றத்தை

ஏற்படுத்தாமல் போவதில்லை.

 இப்போது, நற்கருணைக்கு வருவோம். நற்கருணை என்பது விண்ணக உணவு. இது எந்த மாற்றத்தை நம்மில் கொண்டு வர வேண்டும்?

நம்மில் பல பேர் நற்கருணையை வெறும் சடங்காக பார்ப்பதால்தான், இன்னும் உள்ளிருக்கும் சாத்தான், நம்மை சாதி வெறி, இன வெறுப்பு, ஏற்ற தாழ்வு, ஆண் ஆதிக்கம், பெண் அடிமைத்தனம், குழந்தை தொழிலார் முறை என்று சாத்தானின் செயல்களில் நம்மை ஊறிக் கிடக்க செய்கின்றது. யூதாஸிடம், எப்படி அப்பத்தை பெற்ற பிறகு சாத்தான் புகுந்தான் என கேள்வி கேட்கும் நமக்கு, ஏன் நற்கருணையை பெற்ற பிறகும் நாம் இன்னும் பிரிந்து கிடக்கின்றோம் என்பதற்கான விடை அறிய விருப்பமில்லை.

 'உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்ளத் தேவையான ஆற்றல் அனைத்தையும் நீங்கள் வான் தூதர்களின் உணவாகிய இந்த அப்பத்தை உண்ணும்போது பெறுவீர்கள்'.

 புனித பியர் ஜார்ஜியோ ஃபிராசாட்டி

 நமது வாழ்வுக்கும், நற்கருணை பெறுதலுக்கும் இடையே மிக பெரிய போராட்டம் இருக்கிறது. நற்கருணை நம்மை இறை அரசை நோக்கி நகர்த்த வேண்டும்.

 நற்கருணையை பெற்ற நாம்,

சிறிது கோபம் குறைந்தவராக மாற வேண்டும்

சிறிது புரிதல் கொண்டவராக மாற வேண்டும்

சாதிய வெறியை ஒதுக்கியவராக சிறிதேனும் மாற வேண்டும்

ஆண் ஆதிக்கம் குறைத்தவராக பிறரை மதிப்பவராக மாற வேண்டும்

பெண்களை சம உரிமை உடைய நபராக நடத்த முன் வர வேண்டும்

குழந்தைகளை பயன்படுத்தாது அவர்கள் உரிமைகளை பேணுபவராக மாற வேண்டும்

மன்னிக்கும் மனிதராக மாற வேண்டும்

துரோகங்களை இழைக்காத மனிதராக முயற்சிக்க வேண்டும்

நற்கருணை இந்த மாற்றங்களை ஏற்படுத்தாத போது, சாத்தான் யூதாஸிடம் மட்டும் அல்ல, நம்மிடையேயும் உள் புகுவான். சந்தேகமே இல்லை.

இந்த வாரத்தில்தான் ஏசுவுக்கு எத்தனை எத்தனை சோதனைகள், கனத்த நிமிடங்கள்?

துரோகம்

காட்டிக் கொடுத்தல்

மறுதலித்தல்

விட்டு விலகல்

சிலுவை பாதை

சிலுவை மரணம்

அவரை விடவா நாம் துன்பப்பட போகிறோம்?

சில நாட்களுக்கு முன் கூட, என் உடன் பேசியவர்கள், உடன் நடந்தவர்கள், உடன் பிறப்பே என்றவர்கள், உடன் சிரித்தவர்கள், வேண்டும் போது என் உதவி பெற்றவர்கள், ஒரு கண பொழுதில் என்னை தவிர்த்து ஒரு நிகழ்வில் பங்கேற்க முயன்றதை நினைத்து, ரொம்பவே கலங்கி போனேன். ஏன் என்னை தவிர்த்தார்கள்? நான் வேண்டாதவனாகி விட்டேனா? இறைவா இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர்? என்ற இயேசுவின் உணர்வு எனக்கும் வந்தது. உள்ளம் உடைந்து வருந்தினேன். மனத்தால் மன்னிக்க முடியாது என்று என்னையே வருத்திக்கொண்டேன், இன்றைய நற்செய்தியை கேட்கும் வரை.

இயேசு பேதுருவையோ, யூதாசையோ கைவிட்டு விடவில்லை மாறாக தனது அன்பை தொடர்ந்து செலுத்தினார். எனக்கும் அது ஒரு பாடமே. நற்கருணையை பெற்ற பின்பும், நான் மாற வில்லை என்றால், ஏசுவுக்கு இடமில்லையென்றால், சாத்தான் தான் உள் நுழைவான் கோபம், வெறுப்பு, எரிச்சல் என பல உணர்வுகள் வழியாய்.

இயேசுவுக்கே இடம் தந்தேன்.

இன்றைய நற்செய்திக்கும்,

இன்றைய நற்கருணைக்கும் நன்றி,

என்னை மீண்டும் மீட்டுக் கொண்டதற்காய்.