திங்கள், 22 ஜூன், 2026

விவாதங்கள் முடிவதில்லை

 

சில விவாதங்கள் ஒருபோதும் முடிவதில்லை

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (645)

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும் என்று வள்ளுவர் 'சொல்வன்மை' யில் கூறுகின்றார்.

ஆனால் இந்த திருக்குறள், உறவுகளுக்கு இடையே ஏற்படும் உரையாடல்களுக்கு சொல்லப்பட்டதல்ல. ஆனால் பெரும்பான்மையோர் (என்னையும் சேர்த்துதான்), இதை உறவுகள் விரிய காரணமாக்கி விடுகின்றனர்.

உரையாடல் - விவாதம்:

எத்தனை முறை, நமது அன்பானவருடன் ஏற்பட்ட சிறிய உரையாடல், விவாதமாகி, விரிசல் ஏற்பட்டு, அமைதியாய் பிரிந்திருக்கிறோம். அந்த விவாதங்கள், அமைதியில் முடிந்தாலும் சரி; அல்லது ஆரவாரத்தோடு முடிந்தாலும்; அவை ஒரு போதும் முடிவதில்லை. அவை அந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு பெயர்ந்து செல்கின்றனவே தவிர, ஒரு போதும் முடிந்து போவதில்லை.   

அவை அமைதியானதொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றன, அவ்வளவே. உங்கள் நினைவுகளின் ஆழத்திற்கு.

இடப்பெயர்ச்சி:

பெரும்பாலான விவாதங்கள், வார்த்தைகள் ஓய்ந்ததும் முடிவுக்கு வருவதில்லை. அவை மிகத் தாமதமாகவே முற்றுப் பெறுகின்றன.

சில நேரங்களில் பல வருடங்கள் கழித்து.

சில நேரங்களில் ஒருபோதும் முற்று பெறுவதே இல்லை.

வார்த்தைகள் நின்றுவிடுகின்றன.

மனிதர்கள் கடந்துவிடுகிறார்கள்.

வாழ்க்கை பரபரப்பாகிவிடுகிறது.

ஆனால், வியப்பளிக்கும் வகையில், பல கருத்து வேறுபாடுகள் வெறுமனே தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றன. அவை விவாதம் நடந்த அந்த அறையை விட்டு வெளியேறி, ஆழ் நினைவுகளுக்குள் குடியேறுகின்றன.

அங்குதான் அவை அமர்ந்திருக்கின்றன.

காத்திருக்கின்றன...

மிக அமைதியாக.

சரியான நேரத்திற்காய் காத்திருக்கின்றன:

'அன்று வேறு மாதிரி பதில் சொல்லியிருக்கலாமோ' என்று நீங்கள் ஏங்கும் ஒரு தருணம்.

நீங்கள் திருத்தாமல் விட்ட ஒரு புரிதல் குறைபாடு. அந்த புரிதலை சொல்லி தெரிய படுத்தி இருக்கலாமோ என்ற ஆதங்கம்.

விசித்திரம் என்னவென்றால், விவாதித்தவர் எப்போதோ விவாதத்தை நிறுத்திய பிறகும், நாம் இன்னும் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதுதான்.

வெளியே சத்தமாக அல்ல.

நம் மனதிற்குள்.

வாகனம் ஓட்டும்போது...

நடக்கும்போது...

உறங்க முயலும்போது...

யாரோ ஒருவர் சொன்ன சொல் நம்மை பழைய நினைவுகளுக்குள் தர தரவென இழுத்து செல்லும்போது;

நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், நம்மை தொடர்ந்து ஆட்கழிக்கும்போது.

எப்போதோ முடிந்து மடிந்து போன உரையாடலை, இப்போது மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட்டிப் பார்க்கிறோம்.

இன்னும் சிறந்த பதில்களை அதில் சேர்க்கிறோம்.

வலிமையான வாதங்களை முன்வைக்கிறோம்.

மூன்று வருடங்கள் தாமதமாக வந்து சேர்ந்த அந்த "மிகச்சரியான" பதிலைச் சொல்லிப் பார்க்கிறோம்.

முற்றுப்புள்ளி:

பல கற்றும், இது நாள் வரை நான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுதான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைத்திருந்தேன்—. ஆனால் சமீபகாலமாக எனக்கு அதில் உடன்பாடில்லை.

சில விவாதங்கள், யாரோ ஒரு நபர் திறமையாக வாதிட்டதால், இறுதியாக வென்றுவிட்டதால், முடிவுக்கு வருவதில்லை. மாறாக, அந்த விவாதத்தின் சுமையைத் தாங்கித் தாங்கி ஒருவருக்கு அலுத்துப் போகும்போதுதான் அது முடிகிறது.

அதற்குக் காரணம் அறிவோடு விவாதித்தவர் வெல்லும் சொல் கொண்டவர் என்பதால் அல்ல; அல்லது அவர் சொன்னது சரி என்று அர்த்தமல்ல

அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்: அந்த விவாதம் இனிமேலும் தங்கள் மனதை ஆக்ரமித்து, மென்மேலும் துன்பம் தர அவர்கள் விரும்ப வில்லை என்று தான் பொருள்.

தங்கள் மனதின் வெளியை அவர்கள் இந்த விவாதத்துக்கு கையளிக்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

ஒருவேளை, அந்த வெற்றியை விடவும், இந்த மனவிலகலே அவர்கள் மனதிற்கு மிக நெருக்கமானதாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சனி, 30 மே, 2026

எனது சுயரூபங்கள் (Adaptation of 'Seven Selves' from "The Madman" by Khalil Gibran)

நள்ளிரவு ...

ஆழ்ந்த இருள் ...

கண்ணை திறந்தாலும், மூடினாலும் வித்தியாசமில்லா இருள் ...

அரை தூக்கத்தில், மின் துண்டிப்பால் புரண்டு கொண்டிருந்தேன்

அப்போது ...

எனது ஏழு சுயரூபங்களும் என்னை சுற்றி அமர்ந்து, எனக்கு கேட்காதவாறு பேசிக் கொண்டிருந்ததை, நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 


அதில் முதலாமவன் 'வலி' பேசினான்:


இந்த பித்தனின் உடலோடு இத்தனை ஆண்டுகள் உடனிருந்தேன். எத்தனை எத்தனை வலிகள்? எவ்வளவு துன்பங்கள்? உடல் வலி, உள்ள வலி என்று உழன்று கொண்டு இவனுக்கு வலி உண்டாக்குவதே எனது பணி. துன்பம் சமைப்பதே எனது தொழில். எதை சாதித்தேன்? துயர், அல்லல், வேதனை, இன்னல், இடர், கஷ்டம், கவலை, சோகம். துக்கம், வருத்தம், இடும்பை என இவனுக்கு வகை வகையாய் துன்பம் தந்ததை விட என்னத்த கண்டேன் இந்த வாழ்க்கையிலே?

இவனை விட்டு வெளியேற, நான் தான் தகுதியானவன்


இரண்டாமவன், 'மகிழ்ச்சி':


 

உனது வாழ்க்கை பரவாயில்லை

எனது தலைவிதியைப் பார்.

அவன் சிரிக்கும்போது நான் சிரிக்க வேண்டும்.

தலை கால் புரியாமல் குதிக்கும்போது, நான் குதிக்க வேண்டும்.

மகிழும்போது, மகிழ வேண்டும்.

திளைக்கும்போது, திளைக்க வேண்டும்.

புதிய புதிய மகிழ்ச்சிகளை உருவாக்கி இவனை மகிழ்விப்பதே எனது பணி.

அது அவ்வளவு எளிதல்ல. எதற்கும் எளிதில் மகிழ தெரியாத ஜென்மம் இது.

இவனை மகிழ்விப்பதற்குள், என் வாழ்நாள் முடிந்து விடும் போலிருக்கிறது.

என்னை போக விடுங்கள் முதலில்.


மூன்றாமவன், 'அன்பு' கோபத்தில் கொப்பளித்தான்:


 

உங்களுடையதெல்லாம் ஒரு பிரச்னையா?

அன்பு

பற்ற வைத்தால் பற்றாத...

அணைத்தால் அணையாத....

ஓர் வினோத நெருப்பு.

இவன் அன்பு தீயில் பற்றி எரியும்போது, நானும் உடனெறிகிறேன்.

இவனுடைய அன்பின் தேவைகளை...

பேரார்வமாய்

காதலாய்

காமமாய்

ஆழ்மன வேட்கைகளாய்

சொல்லொணா பேரவவாய்

அதீத பொருட் பற்றாய்

ஆற்றமுடியா இச்சைகளாய்

மனவெழுச்சிகளாய் இவனை பராமரிப்பது எனது வேலை.

இவனுடன் வாழ்வதே ஒரு நரகம்.

நான் முதலில் வெளியே போகிறேன்.

 

நான்காமவன், 'வெறுப்பு' வெறுப்புடன் சொன்னான்:


அப்பப்பா, இவனோடு வாழ்வது, தீவிர எதிர்மறை உணர்ச்சியான எனக்கே அலுப்பு தட்டுகிறது. உங்கள் அனைவரையும் ஒப்பிடும்போது, சற்று யோசித்துப் பாருங்கள் எனது பணியை.

வெறுப்பையும், காழ்ப்புணர்வையும், கேடு விளைவிக்கும் சிந்தனைகளையும், பாழ் படுத்தும் பல திட்டங்களையும் இவனுக்கு கொடுப்பதே என் வேலை. இவன் புறத்தோற்றம் உங்களுக்கு இனிதாய் இருக்கலாம், ஆனால் இவனுடைய அகம் எனக்கு மட்டுமே தெரியும். அகத்தின் அழகு, முகத்தில் மட்டும் தெரிந்தால், அவ்வளவுதான், ஒருத்தரும் இவன் பக்கம் வர கூட மாட்டார்கள். அப்பப்பா... சொல்லவே வாய் கூசுகிறது.

என்னை அனுமதியுங்கள் முதலில் இவனை விட்டு விலக.


ஐந்தாமவன் சிரித்தான், அவன்தான் 'சிந்தனை'


 

நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப சரிதான்.

ஆனால் ஒன்னு யோசிச்சீங்களா? (ஹாஹாஹா அதுதான் உங்களால முடியாதே)

ஏன்னா? அதுதான் என்னோட வேலை.

நான் சிந்தனைகளை புதிது புதிதாக உருவாக்குவதால தான், உங்கள் வேலைகளை பற்றி நீங்க யோசிக்குறீங்க. உங்கள் வேலைகளும் உங்களுக்கு அர்த்தம் தருது. அதே சமயம் அலுப்பும் தட்டுது. இது  எல்லாமே என் வேலை தான்.

சிந்திக்கும் திறன்

படைக்கும் திறன்

புதுமைக்கான தாகத்தை உருவாக்கும் திறன்

ஓய்வற்ற நித்திய தேடலில் எப்போதும் அலைபவன் நான்

இன்னும் இருத்தலுக்கு உட்படாத

புதிரான படைப்புகளை

தேடி தேடி அலைபவன் நான்

எனக்கு ஓய்வென்பதே இவனோடு இருக்கும் மட்டும் இல்லவே இல்லை

இவனை விட்டு ஒழிவது ஒன்றே எனக்கான வழி     

 

ஆறாமவன், 'உழைப்பு' கண்ணீரோடு மல்கினான்.

 


'சிந்தனை' சொல்வதும் சரிதான்.

சிந்தனை இல்லையென்றால் வேறு எந்த செயலும் பயனளிக்காது.

ஆனால் ஒன்றை யோசித்தீர்களா?

சிந்தனைக்கு உருவம் கொடுப்பது நான் தான் 'உழைப்பு'

சிந்திப்பதை கைகளால் உருவாக்குவது நான் தான்.

சிந்தையில் உள்ள விந்தைகளை சந்தைப்படுத்துவது நான் தான்.

எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றுவது 'உழைப்பு' தான்.

ஆக, உங்கள் எல்லாரையும் விட இந்த பித்தனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது நான் தான்.

எதையாவது செய்துகொண்டே இருப்பான்.

எதையாவது உருவாக்கி கொண்டே இருப்பான்.

இவனிடம் இருந்து விலகி இருப்பது எனக்கே ரொம்ப அவசியம்.

 

ஏழாமவன், எதுவும் சொல்லாமல், வெறுமையாய் 'வெளியை' வெறித்துக் கொண்டிருந்தான்.

அறுவரும், அவனை தட்டி அழைத்து, நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?, என்றனர்.

 


அவன் திரும்பி, நீங்கள் அனைவரும் புலம்பி தீர்ப்பதைப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது என்றான்.

ஏன் தெரியுமா?

தூங்கி கொண்டிருக்கிறானே இவனுடைய வாழ்க்கையில் உங்கள் அனைவருக்கும் செய்யவேண்டிய ஏதோ ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் 'வெறுமை'. எனக்கென்று எந்த ஒரு பணியுமல்ல.

 எப்போதெல்லாம் இவன் துன்பப்படவில்லையோ...

எப்போதெல்லாம் இவன்மகிழவில்லையோ

எப்போதெல்லாம் இவன் அன்பு காட்டவில்லையோ

எப்போதெல்லாம் வெறுப்பை உமிழ வில்லையோ

எப்போதெல்லாம் சிந்திக்கவில்லையோ

எப்போதெல்லாம் உழைக்கவில்லையோ

 அப்போதெல்லாம் இவன் செய்தது ஒன்றே ஒன்றுதான் 

'வெறுமையாய்' அமர்ந்திருந்தான்.

அவனோடு நானும் அமர்ந்திருந்தேன்.

நீங்கள் அனைவரும் செய்யும் பணிக்காக சலித்துக் கொள்கிறீர்கள்

நான் ஒன்றும் செய்யாமல், இவன் உடனிருக்க, சகிக்க முடியாமல் உங்கள் முன் நிற்கிறேன்.

ஜன்னலைப் பார்த்தபடி

விட்டத்தை பார்த்தபடி

சுவரை பார்த்தபடி

வானத்தை பார்த்தபடி

மரத்தை செடியை நாயை நரியை

பார்த்தது பார்த்தபடி 'வெறுமையாய்' உட்கார்ந்திருக்கிறானோ,

அவனோடு நானும் 'வெறுமையாய்' உட்காருவதுதான் எனது வேலை.

சும்மா இருப்பது கடினம்

சும்மாவே வாழ்நாள் முழுதும் இருப்பது?

யோசியுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும், அவனுடைய வாழ்க்கையை புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, நான் மட்டும் தனியனாய், வெறுமையாய், எதையும் செய்யாமல் சும்மாவே இருக்க வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்: யார் உண்மையில் வெளியேற வேண்டும் என்று?


முதலில் பேசிய, ஆறு சுய ரூபங்களும், இவனது நிலைமையை கண்டு, தங்களுக்குள் வருத்தப்பட்டு, மீண்டும் தங்கள் பணியை தொடர என்னோடு வந்து உறங்கிப்போயின.

'வெறுமை' மட்டும் தனியனாய், வெறுமையை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது.

தவற விட்டதையெல்லாம்

தவறாமல் நினைவு படுத்துவது

தனிமை தான் 

 

தனிமை வெறுமையின் உடன் பிறப்பு

 தனிமை தருவது இரண்டு பெரும் கொடைகள்:

விடுதலை

காலையில் நாம் எழுந்துவிட்டோமா? என கேட்கவும்

இரவு தூங்கு முன் தேடுவதற்கும் ஒருவரும் இல்லையென்றால்

அதை என்னவென்று சொல்வது: தனிமையா? விடுதலையா?

 

பாதுகாப்பு

பிறர் நம்மை புரிந்துகொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் இருந்து

பாதுகாப்பது, தனிமை தரும் இன்னொரு கொடை.


தூங்கும் எனக்கு மட்டும் தான் தெரியும்; 'வெறுமையும்' என்னை விட்டு போகாது என்று.