சனி, 30 மே, 2026

எனது சுயரூபங்கள் (Adaptation of 'Seven Selves' from "The Madman" by Khalil Gibran)

நள்ளிரவு ...

ஆழ்ந்த இருள் ...

கண்ணை திறந்தாலும், மூடினாலும் வித்தியாசமில்லா இருள் ...

அரை தூக்கத்தில், மின் துண்டிப்பால் புரண்டு கொண்டிருந்தேன்

அப்போது ...

எனது ஏழு சுயரூபங்களும் என்னை சுற்றி அமர்ந்து, எனக்கு கேட்காதவாறு பேசிக் கொண்டிருந்ததை, நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

 


அதில் முதலாமவன் 'வலி' பேசினான்:


இந்த பித்தனின் உடலோடு இத்தனை ஆண்டுகள் உடனிருந்தேன். எத்தனை எத்தனை வலிகள்? எவ்வளவு துன்பங்கள்? உடல் வலி, உள்ள வலி என்று உழன்று கொண்டு இவனுக்கு வலி உண்டாக்குவதே எனது பணி. துன்பம் சமைப்பதே எனது தொழில். எதை சாதித்தேன்? துயர், அல்லல், வேதனை, இன்னல், இடர், கஷ்டம், கவலை, சோகம். துக்கம், வருத்தம், இடும்பை என இவனுக்கு வகை வகையாய் துன்பம் தந்ததை விட என்னத்த கண்டேன் இந்த வாழ்க்கையிலே?

இவனை விட்டு வெளியேற, நான் தான் தகுதியானவன்


இரண்டாமவன், 'மகிழ்ச்சி':


 

உனது வாழ்க்கை பரவாயில்லை

எனது தலைவிதியைப் பார்.

அவன் சிரிக்கும்போது நான் சிரிக்க வேண்டும்.

தலை கால் புரியாமல் குதிக்கும்போது, நான் குதிக்க வேண்டும்.

மகிழும்போது, மகிழ வேண்டும்.

திளைக்கும்போது, திளைக்க வேண்டும்.

புதிய புதிய மகிழ்ச்சிகளை உருவாக்கி இவனை மகிழ்விப்பதே எனது பணி.

அது அவ்வளவு எளிதல்ல. எதற்கும் எளிதில் மகிழ தெரியாத ஜென்மம் இது.

இவனை மகிழ்விப்பதற்குள், என் வாழ்நாள் முடிந்து விடும் போலிருக்கிறது.

என்னை போக விடுங்கள் முதலில்.


மூன்றாமவன், 'அன்பு' கோபத்தில் கொப்பளித்தான்:


 

உங்களுடையதெல்லாம் ஒரு பிரச்னையா?

அன்பு

பற்ற வைத்தால் பற்றாத...

அணைத்தால் அணையாத....

ஓர் வினோத நெருப்பு.

இவன் அன்பு தீயில் பற்றி எரியும்போது, நானும் உடனெறிகிறேன்.

இவனுடைய அன்பின் தேவைகளை...

பேரார்வமாய்

காதலாய்

காமமாய்

ஆழ்மன வேட்கைகளாய்

சொல்லொணா பேரவவாய்

அதீத பொருட் பற்றாய்

ஆற்றமுடியா இச்சைகளாய்

மனவெழுச்சிகளாய் இவனை பராமரிப்பது எனது வேலை.

இவனுடன் வாழ்வதே ஒரு நரகம்.

நான் முதலில் வெளியே போகிறேன்.

 

நான்காமவன், 'வெறுப்பு' வெறுப்புடன் சொன்னான்:


அப்பப்பா, இவனோடு வாழ்வது, தீவிர எதிர்மறை உணர்ச்சியான எனக்கே அலுப்பு தட்டுகிறது. உங்கள் அனைவரையும் ஒப்பிடும்போது, சற்று யோசித்துப் பாருங்கள் எனது பணியை.

வெறுப்பையும், காழ்ப்புணர்வையும், கேடு விளைவிக்கும் சிந்தனைகளையும், பாழ் படுத்தும் பல திட்டங்களையும் இவனுக்கு கொடுப்பதே என் வேலை. இவன் புறத்தோற்றம் உங்களுக்கு இனிதாய் இருக்கலாம், ஆனால் இவனுடைய அகம் எனக்கு மட்டுமே தெரியும். அகத்தின் அழகு, முகத்தில் மட்டும் தெரிந்தால், அவ்வளவுதான், ஒருத்தரும் இவன் பக்கம் வர கூட மாட்டார்கள். அப்பப்பா... சொல்லவே வாய் கூசுகிறது.

என்னை அனுமதியுங்கள் முதலில் இவனை விட்டு விலக.


ஐந்தாமவன் சிரித்தான், அவன்தான் 'சிந்தனை'


 

நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப சரிதான்.

ஆனால் ஒன்னு யோசிச்சீங்களா? (ஹாஹாஹா அதுதான் உங்களால முடியாதே)

ஏன்னா? அதுதான் என்னோட வேலை.

நான் சிந்தனைகளை புதிது புதிதாக உருவாக்குவதால தான், உங்கள் வேலைகளை பற்றி நீங்க யோசிக்குறீங்க. உங்கள் வேலைகளும் உங்களுக்கு அர்த்தம் தருது. அதே சமயம் அலுப்பும் தட்டுது. இது  எல்லாமே என் வேலை தான்.

சிந்திக்கும் திறன்

படைக்கும் திறன்

புதுமைக்கான தாகத்தை உருவாக்கும் திறன்

ஓய்வற்ற நித்திய தேடலில் எப்போதும் அலைபவன் நான்

இன்னும் இருத்தலுக்கு உட்படாத

புதிரான படைப்புகளை

தேடி தேடி அலைபவன் நான்

எனக்கு ஓய்வென்பதே இவனோடு இருக்கும் மட்டும் இல்லவே இல்லை

இவனை விட்டு ஒழிவது ஒன்றே எனக்கான வழி     

 

ஆறாமவன், 'உழைப்பு' கண்ணீரோடு மல்கினான்.

 


'சிந்தனை' சொல்வதும் சரிதான்.

சிந்தனை இல்லையென்றால் வேறு எந்த செயலும் பயனளிக்காது.

ஆனால் ஒன்றை யோசித்தீர்களா?

சிந்தனைக்கு உருவம் கொடுப்பது நான் தான் 'உழைப்பு'

சிந்திப்பதை கைகளால் உருவாக்குவது நான் தான்.

சிந்தையில் உள்ள விந்தைகளை சந்தைப்படுத்துவது நான் தான்.

எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றுவது 'உழைப்பு' தான்.

ஆக, உங்கள் எல்லாரையும் விட இந்த பித்தனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது நான் தான்.

எதையாவது செய்துகொண்டே இருப்பான்.

எதையாவது உருவாக்கி கொண்டே இருப்பான்.

இவனிடம் இருந்து விலகி இருப்பது எனக்கே ரொம்ப அவசியம்.

 

ஏழாமவன், எதுவும் சொல்லாமல், வெறுமையாய் 'வெளியை' வெறித்துக் கொண்டிருந்தான்.

அறுவரும், அவனை தட்டி அழைத்து, நீ ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா?, என்றனர்.

 


அவன் திரும்பி, நீங்கள் அனைவரும் புலம்பி தீர்ப்பதைப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது என்றான்.

ஏன் தெரியுமா?

தூங்கி கொண்டிருக்கிறானே இவனுடைய வாழ்க்கையில் உங்கள் அனைவருக்கும் செய்யவேண்டிய ஏதோ ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் 'வெறுமை'. எனக்கென்று எந்த ஒரு பணியுமல்ல.

 எப்போதெல்லாம் இவன் துன்பப்படவில்லையோ...

எப்போதெல்லாம் இவன்மகிழவில்லையோ

எப்போதெல்லாம் இவன் அன்பு காட்டவில்லையோ

எப்போதெல்லாம் வெறுப்பை உமிழ வில்லையோ

எப்போதெல்லாம் சிந்திக்கவில்லையோ

எப்போதெல்லாம் உழைக்கவில்லையோ

 அப்போதெல்லாம் இவன் செய்தது ஒன்றே ஒன்றுதான் 

'வெறுமையாய்' அமர்ந்திருந்தான்.

அவனோடு நானும் அமர்ந்திருந்தேன்.

நீங்கள் அனைவரும் செய்யும் பணிக்காக சலித்துக் கொள்கிறீர்கள்

நான் ஒன்றும் செய்யாமல், இவன் உடனிருக்க, சகிக்க முடியாமல் உங்கள் முன் நிற்கிறேன்.

ஜன்னலைப் பார்த்தபடி

விட்டத்தை பார்த்தபடி

சுவரை பார்த்தபடி

வானத்தை பார்த்தபடி

மரத்தை செடியை நாயை நரியை

பார்த்தது பார்த்தபடி 'வெறுமையாய்' உட்கார்ந்திருக்கிறானோ,

அவனோடு நானும் 'வெறுமையாய்' உட்காருவதுதான் எனது வேலை.

சும்மா இருப்பது கடினம்

சும்மாவே வாழ்நாள் முழுதும் இருப்பது?

யோசியுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும், அவனுடைய வாழ்க்கையை புதிது புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கும்போது, நான் மட்டும் தனியனாய், வெறுமையாய், எதையும் செய்யாமல் சும்மாவே இருக்க வேண்டும்.

இப்போது சொல்லுங்கள்: யார் உண்மையில் வெளியேற வேண்டும் என்று?


முதலில் பேசிய, ஆறு சுய ரூபங்களும், இவனது நிலைமையை கண்டு, தங்களுக்குள் வருத்தப்பட்டு, மீண்டும் தங்கள் பணியை தொடர என்னோடு வந்து உறங்கிப்போயின.

'வெறுமை' மட்டும் தனியனாய், வெறுமையை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது.

தவற விட்டதையெல்லாம்

தவறாமல் நினைவு படுத்துவது

தனிமை தான் 

 

தனிமை வெறுமையின் உடன் பிறப்பு

 தனிமை தருவது இரண்டு பெரும் கொடைகள்:

விடுதலை

காலையில் நாம் எழுந்துவிட்டோமா? என கேட்கவும்

இரவு தூங்கு முன் தேடுவதற்கும் ஒருவரும் இல்லையென்றால்

அதை என்னவென்று சொல்வது: தனிமையா? விடுதலையா?

 

பாதுகாப்பு

பிறர் நம்மை புரிந்துகொண்டு விடுவார்களோ என்ற பயத்தில் இருந்து

பாதுகாப்பது, தனிமை தரும் இன்னொரு கொடை.


தூங்கும் எனக்கு மட்டும் தான் தெரியும்; 'வெறுமையும்' என்னை விட்டு போகாது என்று.