புதன், 9 ஏப்ரல், 2025

ஒரு ஸ்பெஷல் சாதா...

தலைக்கு மேல் வேலை இருந்தது... மனைவியிடம் சொல்லி விட்டு, முடி வெட்டலாம் என சலூனுக்குப் போனேன். எனது முறை வந்ததும், போய் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னை சுழல விட்டு, என் தலையையே பார்த்தான் அந்த பையன். அப்படி பட்ட பார்வை எனக்கு பழகி இருந்தது.

சாதாவா? ஸ்பெஷல் ஆ? ன்னு கேட்டான்.

என் தலைக்கு ஸ்பெஷல்லா வெட்டுனாலே, அது சாதாவா தான் தெரியும் தம்பி. அதனாலே, சாதாவே வெட்டுன்னு சொன்னேன்.

சாதாவா? என ஒரு கேவல தொனியில் கேட்டுவிட்டு வேலையை வேண்டா வெறுப்பாய் தொடர்ந்தான்.

தலை 'கனம்' குறைந்ததால், வீடு திரும்புகையில் ஹோட்டல் போய் டிபன் சாப்டுட்டு. ஒரு காபி குடிச்சுட்டு போலாம்னு நெனச்சேன். போய் உட்கார்ந்ததும், பக்கத்து டேபிளில் சர்வர் பையன், நீண்ட உணவு பட்டியலை 5 நிமிடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தான். நீண்ட பெருமூச்சு விட்டு அவன் முடித்த போது, 'பக்கத்து டேபிள் காரர் இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல்னு கேட்டார்அதை அந்த சர்வர் பையன் மூச்சு முட்ட சொல்லும் முன்னமே கேட்டு இருக்கலாமே? ன்னு நினைத்து கொண்டேன்.

அதே யோசனையில் 4 இட்லி சாப்டுட்டு, காப்பி கேட்டேன். சாதா காப்பியா? இல்ல டிகிரீ காப்பியான்னு சர்வர் பையன் என்னை கேட்டான்?

என்னப்பா வித்தியாசம்? ன்னு கேட்டேன்.

டிக்ரீ காப்பில, பால் தண்ணி கலக்காம 'திக்கா' இருக்கும் சார். அதுமட்டுமில்ல, பில்டர் காபி தூள் மட்டும் தான் பயன்படுத்துவோம் சார்ன்னு  விளக்கம் சொன்னான்.

வீடு திரும்பும்வரை, சாதா, ஸ்பெஷல் யோசனையாவே இருந்தது.

 

வரும்போது தான் கவனித்தேன்... பேருந்துகளில் சாதா பேருந்து, டீலக்ஸ் பேருந்து இருந்தது. அவ்வளவு ஏன்? swiggy, zomato, Blinkit, Zepto போன்ற இணைய வழி சேவைகளில் கூட, சாதா டெலிவரி, express டெலிவரி உள்ளதை உணர்ந்தேன். தெய்வ தரிசனங்களே கூட இன்று சாதா தரிசனம், ஸ்பெஷல் தரிசனம் என்றாகி விட்டது.

இந்த வாழ்க்கை எதை தான் விட்டு வைத்தது?

மனிதர்களை கூட மாத்தி வச்சுருக்கு.


இரண்டு இடங்கள் இந்த கருத்தியலை நம் மனதுக்குள் திணிக்கின்றன.

ஒன்று வீடு:

அவனைப் பார் எப்புடி படிக்கிறான்?

அவள பார் maths ல 100 மார்க் எடுக்குறா?

அந்த பையன பாத்தியா? கோல்ட் மெடல் வாங்கி இருக்கான்.

அந்த பொண்ண பாரு? எவ்ளோ fair ஆ அழகா இருக்குறா?

அந்த ஆள பாரு, காசுல மெதக்குறான்.

இவ்வாறு சாதாரண வாழ்க்கை வேண்டாம்; ஸ்பெஷல் வாழ்க்கை தான் வேணும்னு வீட்டுலயே, இந்த உள்ளார்ந்த மனவியலை உருவாக்கி விடுகிறோம்.

இரண்டு: பள்ளி

பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை.

ஆசிரியர்களும், பெற்றோர்களும் தனது குழந்தை ஸ்பெஷல் குழந்தையாகவே இருக்க விரும்புகிறார்கள்.

சராசரி மாணவர்களை அவர்கள் சீண்டுவது கூட கிடையாது.  

 

சாதாரண வாழ்க்கை என்பது வெற்றியடையாத வாழ்க்கை அல்ல.

அது பொருளாதார ரீதியான வெற்றியை முக்கியமானதாக கருதுவதில்லை

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திரு. ஜாதவ் பயேங்கை (Jadav Payeng) பலருக்கும் தெரியாது. மிகவும் எளிமையான மனிதர், ஒரு சிறிய குடிசை வீட்டில் வசிக்கிறார். டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம் அல்லது பிற அடிப்படை விஷயங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இவர் இந்த உலகத்தின் பார்வையில் ஒரு சாதாரண மனிதன் தான்.

பல ஆண்டுகளாக அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எந்த கோணத்தில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார்.

15 ஆண்டுகளாக, இந்த சமூகம் அவரை ஒரு சாதாரண வேலை செய்யும் ஒரு 'சாதாரண மனிதர்' என்றும், இன்னும் சொல்ல போனால், 'தோல்வியுற்றவர்' என்றும் முத்திரை குத்தியது.

ஆனால் அவர் தனது வழியில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

உலகம் முழுவதும் இவர் 'இந்தியாவின் வன மனிதன்'  என்றே  அறியப்படுகின்றார்.

தனது 16 வயதில் மரங்களை நேசித்து மரக்கன்றுகளை நடுவதற்கு தொடங்கிய அவர், 36 ஆண்டுகள் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வந்தார்.

இது இப்போது 1360 ஏக்கர் வனப்பகுதியாக மாறி விட்டது.

மேலும் 100 க்கு அதிகமான யானைகள்,

ஐந்து/ ஆறு புலிகள்,

சில காண்டாமிருகங்களின் வாழ்விடம் ஆகி போனது.

ஆனால் தனது தாய்நாடான இந்தியாவிலேயே இவர் ஒரு ஸ்பெஷல் மனிதராக இல்லை.

ஆனால் தனக்கு எது அர்த்தம் தருமோ, அதை அவர் பாணியில் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

 

Franz Kafka, என்ற யூத எழுத்தாளர், வாழ்க்கையை பற்றி கூறுவது இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.

"என்னை பொறுத்தவரை வாழ்க்கை அர்த்தமுள்ளது போல ஒரு மாயை உருவாக்கபட்டுள்ளது.

இங்கு கல்வி, பணம், புகழ் மற்றும் பலவற்றை சேர்ப்பதோ அல்லது அவற்றை அடைவதோ மட்டுமே அர்த்தமுள்ள வாழ்க்கை என நினைக்கிறோம். அது ஒரு மாயை நமக்கு நாமே உருவாக்கியது.

பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை,

முட்டாள் முதல் விஞ்ஞானி வரை

நல்லவன் மற்றும் கெட்டவன்,

தனது ஏதோ ஒரு பங்களிப்பை வாழ்வில் செய்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் எந்த உபயோகமும் இல்லை.

இவை இல்லாமலும் உலகம் இயங்கும். இதில் எந்த அர்த்தமும் இல்லை.

நமக்கு பிடித்தோ பிடிக்காமலோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இங்கு நாம் எது எல்லாம் வாழ்கையில் அர்த்தம் என நினைக்கிறோமோ, அவை இல்லாமலும் உலகம் இயங்கும்.

எந்த மாற்றமும் இருக்காது.

நமக்கு நாமே சொல்லி கொல்லும் மிக பெரிய பொய் 'வாழ்க்கை அர்த்தமுள்ளது' என்பதுதான்.

அர்த்தமற்றது வாழ்க்கை.

பிறப்பு முதல் இறப்பு வரையில் நம்முடைய ஆசையை பூர்த்தி செய்யதான்  ஓடி கொண்டு இருக்கிறோம். இதனால் வாழ்க்கை அர்த்தமுள்ளது என ஆகிவிடாது.

நீங்கள் உங்கள் ஆசையை  அடைந்தாலும், அடையாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை."

 

kafka வின் வார்த்தைகள் சற்றே நம்மை புரட்டி போடத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. நாம் தான் நமக்கு அர்த்தத்தை உருவாக்கி கொள்கிறோம்.

'சாதாரண வாழ்க்கை' என்பது தோல்வியல்ல. மாறாக, வாழ்க்கையின் முடிவற்ற எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை என்றே நான் கருதுகிறேன்.

நிம்மதியான வாழ்க்கை என்பது நாம் நமக்கு ஏற்படுத்தி கொள்ளும் தொடர்புகள், இனிய உறவுகள் மற்றும் நமக்கு நாம் உருவாக்கி கொள்ளும் அர்த்தங்கள் தான். இதில் எங்கு போட்டியும், ஒப்புமைகளும் வந்தது.

'சாதாரண வாழ்க்கை' என்பது எதையும் செய்யாமல் இருப்பதல்ல, மாறாக உங்களுக்கு எதையெல்லாம் செய்ய விருப்பமோ அதை  செய்து நிம்மதியாய் வாழ்வது.

உங்களுக்கு விருப்பமானதை பிறர் மேல் திணிக்காமல் வாழ்ந்தாலே, எல்லோருடைய வாழ்க்கையும் தனித்தன்மை வாய்ந்தது தான், நிம்மதியானதுதான்.

எனது பள்ளியில் வாரா வாரம் மாணவர்க்கு "BEST STUDENT OF THE WEEK" என்று ஒரு விருது உண்டு. இனி அந்த விருது கிடைக்கிறதோ இல்லையோ, மாணவரிடம், 'எல்லோரும் அவரவர் வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்வதே சிறப்பு' தான் என சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கும்போதே, என் இனிய மனையாளின் குரல், இனிதாய் கேட்டது சமையலறையிலிருந்து, 'முட்ட தோசையா? சாதா தோசையா?'

'முதல்ல சாதா தோசை பிறகு முட்டை தோசை' ன்னு பதிலளித்தேன்.

சரிதானே!

 

பின்குறிப்பு:

'கோயினோபோபியா' (Koinophobia) என்பது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான பயம், ஒருவரின் வாழ்க்கை சாதாரணமானது அல்லது முக்கியமற்றது, அதற்கு அர்த்தமோ நோக்கமோ இல்லை என்ற உணர்வு.

 

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ஒரு பானைச் சோறு

'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது'  

இது புனித பவுல் கிருத்துவ சமூகங்களில் வேலை செய்யாது ஏமாற்றி பிழைப்பவர்களுக்காக சொல்லப்பட்டது என நாம் நினைக்கிறோம். உண்மையில், நமது குடும்ப வாழ்க்கையில் இவ்வரிகள் மிக பொருந்தும். 

பெரும்பாலும், வீட்டு வேலைகளை அம்மாக்களுக்கும், மனைவியருக்கும் அர்ப்பணித்துவிட்டு, ஹாயாய் கால் மேல் கால் போட்டு பொழுதானைக்கும் மொபைல், டிவி என மாறடிக்கும் நபரானால், உங்களுக்கு தான் இந்த வரிகள் சொல்லப்பட்டுள்ளது. 

'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது'

வீட்டில் நான்: 

இப்படித்தான், பல வேளைகளில், என் மகளிடம், சொல்லி சொல்லி. மனதில் ஒரு உறுத்தலை ஏற்படுத்தி வேலை வாங்குவது எனது இயல்பாகி போனது. அதில் எனக்கு உள்ள பெருமிதம் அலாதி.    

 அப்படி இறுமாந்திருந்த ஒரு நாள், என் இல்லத்தரசி என்னிடம் வந்து, 'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது', சரிதானே? என்றாள். நானும், தோராயமாய், புரிந்தும் புரியாமல் 'ஆம் மிகச்சரி' என்றேன். அப்ப இன்னைக்கு சோறு வடிக்குறது உங்க வேலைனு சொல்லிட்டு போய்ட்டாள். தலையில் இடி விழுந்தாற்  போல இருந்தது, அந்த வேலை பளு. 

ஊருக்கு உபதேசம்: 

'ஊருக்கு உபதேசம் செய்வது' எவ்வளவு எளிது என அப்போதுதான் உணர்ந்தேன். ஓர விழிகளில், எனது மகள் என்னை பரிகாசம் செய்வது தெரிந்தும் தெரியாதது போல் சமாளித்து கொண்டேன்.'உழைக்கலாகாதவன் உண்ணலாகாது' என்ற வரிகள் கேலியாய் என்னைப் பார்த்து சிரிப்பது போல உணர்ந்தேன். பவுலடிகளார் மீது செம்ம கோபம் வந்தது. இருந்தாலும் 'சோறு முக்கியம்' என நினைத்துக் கொண்டு, அரிசி பானையை எடுத்துக் கொண்டு, அரிசி மூட்டை நோக்கி நடந்தேன். 

உங்களுக்கு சவால்: 

'அரிசி உலை வைத்து சோறு வடிப்பது' என்ன அவ்வளவு பெரிய சவாலான வேலையா? ன்னு உங்கள் மனதின் குரல் எனக்கு கேட்கிறது. 

சொல்கிறேன் கேளுங்கள்:

வீட்டில் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கிட வேண்டும். 

ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என மனக்கணக்கு தேவை. 

எத்தனை முறை சாப்பிடுவார்கள்? சிலர் ஒரே முறை சாப்பிடுவது உண்டு. பலர் கொஞ்சம் கொஞ்சமாய் பலமுறை சாப்பிடுவதும் உண்டு. 

மிகக் கச்சிதமாய் அளவுக்கு சோறு வடிக்க கூடாது. 

மிகக் குறைவாயும் வடித்து பற்றாக்குறை வந்து விட கூடாது. 

மிக அதிகம் சோறு வைத்து வீணாக்கவும் கூடாது. 

ரொம்ப குழைக்கவும் கூடாது 

ரொம்ப வெரையாகவும் இருக்கக்கூடாது.

தண்ணி அளந்து ஊத்தணும் 

பொங்கி வழியவும் கூடாது 

அடி தீயவும் கூடாது 

அங்குமிங்கு போனாலும் கவனம் முழுக்க அரிசி பானை மீது இருக்க வேண்டும் 

இவ்வளவு விஷயம் இருக்கு. 

'அரிசி வடிப்பது' ஆய கலைகளில் 65 ம் கலைனே சொல்லலாம். சற்று தவறினாலும், வடித்த சோறு முழுக்க 'அந்தோ கதி தான்'

இனிமேல் யாராவது அரிசி வடித்து சோறு போட்டால், தெய்வமாக பாருங்கள். 'உண்டி கொடுத்தோன், உயிர் கொடுத்தோன்' அல்லவா? 

பானை என்னும் போதி மரம்: 

பானையில் தண்ணீர் கொதித்ததும், களைந்த அரிசியை போட்டேன். 

முதலில் அசைவே இல்லை. 

பின்னர் அரிசி மணிகள் ஒவ்வொன்றாக அசைய ஆரம்பித்தன. 

அங்கொன்றும் இங்கொன்றுமாக குதிக்கத் தொடங்கின. அரிசியின் மேல் கீழான சுழற்சி வேகமெடுக்கத் துவங்கியிருந்தது. சூடு அடியில் இருந்து அரிசியை அலைக்கழிப்பதை பார்க்கும்போது, எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பு கக்குவது தான் நினைவுக்கு வந்தது. கீழிருந்த அரிசி மிக வேகமாக மேல் தள்ளப்பட்டு, மீண்டும் கீழ் இழுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் சுழற்சியில் அரிசி மணிகள். 

அரிசி சற்று வெந்து சோறாக மாற மாற அதன் சுழற்சியில் சற்று தாமதம் ஏற்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக முழுதும் சோறானதும், அதன் சுழற்சி முற்றிலும் நின்று விடுகிறது. பானைக்குள் நெருப்பின் அரவணைப்பில், அரிசி சோறாகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின், சோறை வடித்து பரிமாறுகிறோம். 

சோறு ரெடி...

இந்த அரிசி பானைக்குள் தான் எத்தனை வாழ்க்கைப் பாடங்கள்:

நாம் தான் அரிசி இந்த பாடத்தில். 

நம்மை சூழும் தண்ணீர்: நமக்கு கிடைத்துள்ள உறவுகள், நட்பு வட்டாரங்கள், பணி நிமித்த தொடர்புகள். இந்த தண்ணீர் இல்லாமல் அரிசி சோறாக முடியாது. அதே சமயத்தில், தண்ணீர் சரியான அளவு தான் சோறு பதமாக உதவும். அதிகமானாலும் குறைந்தாலும், ஆபத்துதான். 

நெருப்பு - நமது அனுபவங்கள். இந்த அனுபவங்கள் நமது உறவுகளோடும், நட்புகளோடும், பணி நிமித்த தொடர்புகளோடும் தான் சேர்த்து நம்மை சோறாக உரு மாற்றும். இந்த நெருப்பு, நம்மை தொடக்கத்தில் புரட்டி எடுத்தாலும், கொஞ்ச நேரத்தில் சோறாக மாறுகிறது.

இந்த மாற்றம் தாம் 'பக்குவம்' 

அரிசி சோறாகும் பக்குவம் அரிசிக்கு அரிசி மாறுபடும். 

மனிதர்களும் அனுபவத்தை ஏற்றுக்கொண்டு, அனுபவங்களிலிருந்து பாடங்கள் கற்கும்போது நாம் பக்குவப் படுகிறோம். 

இன்னொரு முக்கியமான விஷயம்... 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்கிறார்கள். சரிதான். சோற்றுக்கு வேண்டுமானால் இந்த சொலவடை பொருந்தும். கட்டாயம் மனிதருக்கு அல்ல. 

ஒவ்வொரு மனிதனின் அனுபவங்கள் வேறு 

ஒவ்வொரு மனிதனும் பக்குவப்படும் காலமும் வேறு

ஒவ்வொரு மனிதனின் உறவும், நட்பும், பணி தொடர்புகளும், அவனுடைய பக்குவத்தை நேரடியாகவே பாதிக்கின்றன. 

அதனால், 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற கூற்று, பொருந்தா கூற்று தானே மனிதர்க்கு. 

சாப்புட போறேன் மன நிறைவோடு, மனைவியோடும் மகளோடும்... 

தட்டில் சோறு என்னை பார்த்து சிரித்தது. 




ஞாயிறு, 7 ஜூலை, 2024

நான் என்ன என் சகோதரனின் காவலாளியா? (வழிப்போக்கன் மனநிலை (Bystander Effect))

 நான் என்ன என் சகோதரனின் காவலாளியா?

 

“தினம் தினம் வெளியில் பயணித்து விட்டு, பத்திரமாக வீடு திரும்புவது, நாம் எல்லோரும் கவனிக்க மறந்த, அல்லது இது என்ன பெரிய விஷயமா என்று எடுத்துக்கொண்ட, ஆசீர்வாதம்.”

சென்னையில் தினம் தினம் பயணிப்போர் நான் சொல்வதை முற்றிலும் ஆமோதிப்பர். சென்னை மட்டுமல்ல, உலகின் எப்பகுதியில் வசிப்போரும் ஆமோதிக்கும் விஷயம் தான், நான் இப்போது சொன்னது.

ஒவ்வொரு நாளும் நான் எனது பள்ளிக்கு பயணிக்கையில், தினம் ஏதோ ஓன்று இரண்டு விபத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். ஒன்றிரண்டு விபத்துகளை நானும் சந்தித்திருக்கிறேன். நான் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவது விபத்துகள் அல்ல மாறாக, விபத்தின் போது, நம்மை சுற்றி இருக்கும் மக்களின் நடத்தையே.

ஆம். வழிப்போக்கன் மனநிலை (Bystander Effect) என்ற மனித செயல்பாட்டை பற்றி தான் பேச விழைகிறேன். சரியான பெயர்தான். அவர்களுக்கும் நமக்குமான தொடர்பு அதுதானே. நாம் விபத்துக்குள்ளானவர்கள், அவர்கள் வழிப்போக்கர்கள்.

'வழிப்போக்கன் மனநிலை' என்றதும் எனது நினைவிற்கு வருவது "நல்ல சமாரியன்" பற்றிய விவிலிய நிகழ்வு தான். எல்லோருடைய புரிதலுக்காக அதை இங்கு தருகிறேன்.

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்."

நாம் விவாதித்துக் கொண்டிருக்கும்விபத்து’ போன்ற நிகழ்வு தான் இதுவும். சமுதாயத்தின் உயர் நிலையில் உள்ள இரண்டு பேர் அந்த விபத்தை கண்டும் காணாது போய் விட்டனர். தாழ்ந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவர் உதவுவதாக இதில் காண்கிறோம். விவிலிய விளக்கத்திற்குள் செல்லாமல் மனித உளவியலின் வழி சிந்திப்போம், மனித செயல்பாட்டின் வழியில்,  இதை ஆய்வோம்.

 

ஏன் ஒரு சிலர் இதை பார்த்தும் பார்க்காமல் சென்றனர்?

ஏன்  ஒருவர் மட்டும் உதவ முன் வந்தார்?

தனி மனித ஆளுமை தான் இதை முடிவு செய்கிறதா? அல்லது

இயற்கையிலேயே ஒரு சிலர் குணவான்களாக பிறந்துள்ளனரா?

 

மூன்று காரணங்களை முன் வைக்கிறேன்:

ஒன்று: பிறருக்கு இல்லாத அக்கறை நமக்கேன்? என்ற மனப்பாங்கு.

இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? நான் ஏன் உதவ வேண்டும்.

யாராவது உதவுவார்கள் என்ற பொறுப்பை பிறர் மீது சுமத்தும் மனப்போக்கு.

 

இரண்டு: பிறர் என்ன நினைப்பார்கள் என்ற அச்சம். இதுவும் ஒரு காரணம்.

நாம் உதவ போய் நம்மை பிறர் கேலிக்கோ கேள்விக்கோ  உட்படுத்தி விடுவார்களோ என்ற அச்சம்.

உனக்கு எதுக்கு தேவை இல்லாத வேல? அப்புடின்னு மத்தவங்க முன்னாடி தல குனிய நேரிடுமோ அப்புடின்னு பயம்.

 

மூன்று: யாருமே உதவ முன் வரவில்லை, அதனால் அது ஒன்னும் அவ்ளோ பெரிய விபத்தா இருக்காதுன்னு நம்மை நாமே நமது அறியாமையினால் ஆற்றுப்படுத்திக் கொள்வது.

"பிரிட்டனில் 2 வயது சிறுவன் ஒருவனை (James Bulger) 10 வயது நிரம்பிய இரு சிறுவர்கள் தெருவில் இழுத்து அடித்து சென்று, கம்பியால் அடித்து கொன்ற சம்பவத்தில், மொத்தம் 38 சாட்சிகள் அந்த நிகழ்வை பார்த்ததாக சொல்லப்பட்டது. ஏன் உதவ வில்லை என்றபோது, அவர்கள் சொன்ன காரணங்கள் எவ்வளவு நம்மை நாமே அறியாமையினால் ஏமாற்றி கொள்கிறோம் என்பதற்கு சான்று. அவர்கள் சகோதரர்கள் அதனால் அவ்வாறு செய்கிறார்கள் என நினைத்தேன் என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள்."

இது ஒரு பாதுகாப்பு நெறிமுறை (Defense Mechanism). உதவாமல் வந்து விட்ட நமது குற்ற உணர்வை சரி செய்ய நமது மனது விளையாடும் ஒரு சித்து விளையாட்டு.

உணர்வா? அறிவா? இதயமா? மூளையா?

பொதுவாக, நாம் இதை போன்று வழிப்போக்கராக ஒரு விபத்தைப் பார்க்கும்போது, அந்த விபரீதத்தின் வீரியத்தில் இருந்து, பதற்றத்தில் இருந்து விடுபட நேரம் ஆகும். அதனால் சில சமயங்களில் ஏதும் செய்யாமல் நாம் இந்த சூழல்களில் உறைந்து போய் விடுகின்றோம்.

இந்த செயல்பாடு, உணர்வு சார்ந்தது.

வேறு சில சமயங்களில், விபத்தில் உள்ளவரின் நிலையில் இருந்து பரிவுடன் (Empathetic) நாம் அந்த நிகழ்வை பார்க்கும்போது, நம் பதற்றத்தையும் மீறி, நாம் நம்மை கட்டுக்குள் கொண்டு வந்து, அந்த நபருக்கு தேவையான உதவியை செய்ய முற்படுகின்றோம்.

இந்த செயல்பாடு, அறிவு சார்ந்தது.

இந்த உள் உணர்வுகள் தான், ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதனை உதவவோ, உதறி தள்ளவோ வைக்கிறது.

 

வழிப்போக்கனிலிருந்து நல்ல சமாரியனாய் மாறுவது எப்படி?

எல்லோருக்குமே இதை போன்ற வாய்ப்புகள் தினம் தினம் வாய்க்கத்தான் போகிறது. அந்த சூழல்களில் நாம் உறைந்து போய் உதவாமல் நம்மை நாமே ஆற்றுப்படுத்துகிறோமா? இல்லை நமது உணர்ச்சி மேலீட்டை சரி வர அறிவு சார்ந்த சிந்தனை வழியாய் நெறிப்படுத்தி உதவ முற்படுகிறோமா?

1. பாதிக்கப்பட்ட மனிதரின் மன நிலையில் இருந்து, அவரின் துன்பத்தை தனதாய் உணர்ந்து செயல்படுதல். ஆங்கிலத்தில் Empathy என்று சொல்லலாம்.

“ஒருமுறை, இளம் பெண் ஒருத்தி தெருவோரம் அமர்ந்து இருப்பதை பார்த்தேன். அவளை சுற்றி சுற்றி நோட்டம் இட்டுக் கொண்டு பலர் இருப்பதையும் பார்த்து விட்டு, என் மனதில் ஒரு சிந்தனை, என் மகளை இப்படி விட்டு விட்டு நான் ஒரு போதும் செல்வேனா? உடனே, வண்டியை நிறுத்தி, மகளிர் சிறப்பு காவல் பிரிவுக்கு அழைத்து, நிலைமையை கூறி, அவர்கள் வரும்வரை அங்கேயே இருந்து அவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீடு திரும்பினேன்.”  

2. ஒருவர் ஆபத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தவுடன், உங்களுடன் முதலில் பேசுங்கள். நான் தான் இந்த சூழலில் அந்த நபருக்கு கிடைக்கும் முதல் உதவி என்று. Self Talk என்பது மிகவும் அவசியம். உங்களை நீங்கள் சமாதானப் படுத்தி விட்டால், பிறகு நீங்கள் தான் ஹீரோ.

 3. ஆபத்தான சூழலில், நீங்கள் மட்டும் உதவுவது ஆபத்தாகிவிடும். மற்றவர்கள் உதவுகிறார்கள், இல்லை என்பதை தாண்டி, மற்றவருக்கும் சேர்த்து என்ன செய்ய வேண்டும் என்பதை சத்தமாய் சொல்லுங்கள்.

போலீஸ்க்கு போன் செய்யுங்கள்;

தண்ணீர் கொடுங்கள்;

தடுத்து நிறுத்துங்கள்.

உங்கள் சொற்களுக்காக பலரும் தங்கள் உணர்வளவில் காத்து கிடக்கிறார்கள். உங்கள் சொற்கள் அவர்களை செயலில் ஈடுபட வைக்கும்.

4. இறுதியாக, நான் என்ன என் சகோதரனுக்கு காவலாளியா? என்று காயின் கேட்டதை போல, உங்களை நீங்களே அந்த சூழலில் இருந்து அந்நியப்படுத்தாதீர்கள். மாறாக, எல்லோரும் எனது உரிமைச் சகோதரர், சகோதரி என்ற உணர்வில் இருந்து செயல்படுங்கள்.

“ வழிப்போக்கர்கள் ஏராளம்

சமாரியர்களே அரிது

அரிதாய் இருங்கள் “