ஞாயிறு, 8 ஜனவரி, 2023

குப்பை வாழ்க்கை

குப்பை வாழ்க்கை


திக்கற்று தெருவில் நின்றதுண்டா?

மழையோ 

வெயிலோ 

வெள்ளமோ 

பஞ்சமோ 

கொண்டாட்டமோ 

கருமாதியோ

கையில் காசில்லாமல் 

தின்ன கதியில்லாமல் 

மாத்த துணியில்லாமல் 

மலம் கழிக்க ஒதுங்க இடமில்லாமல் 

தாகத்துக்கு தவித்தபடி 

எனக்கு மட்டும் ஏனிப்படி 

என மனக்குரல் மட்டும் ஓயாது ஒலிக்க 

திக்கற்று தெருவில் நின்றதுண்டா? 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் 

வாடினாராம் வள்ளலார் 

வாடும் மனிதரை இழிந்த மயிராய்க் கூட 

மதிக்க இன்று ஆளில்லை 


தெருவில் நிற்கும்போதுதான் ஒன்று புரிந்தது 

எல்லா கதவுகளும் பூட்டப்பட்டு இருப்பது 

எல்லா இடங்களும் யாரோ ஒருவர்க்கு சொந்தம் என்று 

கக்கூஸ் கூட கதைவடைக்கப்பட்டிருக்கிறது 

பொது குழாய்கள் கூட பூட்டப்பட்டிருந்தது 

தெருவோர பிளாட்பார்ம்கள் மட்டும் தான் இலவசம் 

ஆனால் அதோடு மரணமும் இலவசம் 

கொழுத்த குடித்த பணக்காரனுக்கு 

தன் சொகுசு காரை ஓட்ட 

ரோடு பத்தலையாம் - எங்கள் 

மண்டை ஓடும் தேவையாம் 


தெருவில் நிற்பவனுக்கு 

ஜனநாயகமும் ஒன்றுதான் 

சர்வாதிகாரமும் ஒன்றுதான் 

ஒரே வித்தியாசம் ...

சர்வாதிகாரம் எங்களை சாகடிக்கும் 

ஜனநாயகம் எங்களை மறக்கடிக்கும் 


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக