செவ்வாய், 30 செப்டம்பர், 2025

கலிலேய கரையும், கரூரும்

இன்றைய நிலைமைக்கு நாம் எதை பேசினாலும், நம் மீது அரசியல் சாயம் பூசிவிடுவார்கள் என்ற ஆபத்தை அறிந்தே இதை எழுத முனைகிறேன்.

நடிகர் விஜய்யின் கட்சி பரப்புரையின் போது, கரூரில் நடந்த உயிரிழப்புகளை பற்றி தான் சொல்லுகிறேன். இப்போது சமூக வலைதளங்கள் முழுதும் இரு வேறு கட்சிகள் ஒருவரை ஒருவர் சிலுவையில் ஏற்றி கழுவேற்றும் பணியை சிரமேற்கொண்டு செய்து வருகின்றனர். எவ்வளவுக்கு கீழ்த்தரமாக ஒருவரை ஒருவர் பழி சாற்ற முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு செய்து கொண்டு இருக்கின்றனர். இப்படி பட்ட தருணத்தில் நான் யார் சார்பாக என் கருத்தை முன் வைக்க துணிகிறேன் என்று நீங்கள் அறிவதும் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.

இறை வார்த்தையும், இன்றைய நிகழ்வும்:

"ஒரு கையில் விவிலியத்தையும், மறு கையில் செய்தித்தாளையும் ஏந்திச் செல்லுங்கள்" என்ற இந்த மேற்கோள் ஜெர்மன்-இறையியலாளர் கார்ல் பார்த்தால் (KARL BARTH) கூறப்பட்டது. இந்த கூற்று தான் என்னை இறைவார்த்தையையும், இன்றைய நிகழ்வையும் தொடர்பு படுத்த உந்தி தள்ளியது.

ஒரு கிறிஸ்தவர் உலக நடப்புகளைப் பற்றி அறிந்தவராக இருக்க வேண்டும், அதிலிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, அதைப் புரிந்துகொண்டு, தங்கள் நம்பிக்கையை பயன்படுத்தி இறை சித்தத்தை அறிய  முயற்சிக்க வேண்டும்.

என்னை சிந்திக்க தூண்டிய விவிலிய பகுதி:

இயேசு அங்கிருந்து புறப்பட்டுப் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர்.

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.

மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர்.

இயேசு அவர்களிடம்,

அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்

என்றார்.

 

இன்று, இந்த விவிலிய பகுதியில் நாம் கவனம் செலுத்த வேண்டியது 5000 அப்பங்களை பலுகச் செய்தாரா? அல்லது பகிரச் செய்தாரா? என்பதல்ல. மாறாக, தன்னை தேடி வரும் மக்களை அவர் எவ்வாறு நடத்தினார் என்பது தான்.

 பரிவு எங்கே?

கலிலேய கரையோரம், இயேசு இறையாட்சியை பறைசாற்றினார்

கரூரில், திரு. விஜய் அவர்கள் அவருடைய ஆட்சிக்காக பரப்புரை செய்தார். அவ்வளவுதான் வித்தியாசம்.

இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொண்டார்; அதுதான் அந்த நேரத்தின் முக்கியத்துவம்.

திரு. விஜய் அவர்களின் கூட்டத்தில், மதியம் 12.00 மணிக்கு வர வேண்டிய அவர் இரவு 07.00 மணிக்கு வந்து சேரும்போதே அவர் மனதில் கொண்டிருக்க வேண்டிய முக்கியமான விஷயம்: தன்னை காண கூடியிருக்கும் மக்களின் நிலைமை

காலை முதல், 12 மணி நேரத்துக்கும் மேலாக நிற்கும் தனது ரசிகர்களை மனதில் கொண்டு செய்ய வேண்டிய சிலவற்றை செய்திருக்கலாம் என எனக்கு தோன்றியது.

யார் குற்றம்?

அந்த அசம்பாவிதம் பற்றி சிலர் விஜய் அவர்களையும்,

சிலர் ஆளும் கட்சியையும்,

சிலர் போலீஸின் மெத்தன போக்கென்றும்

இப்பொழுது ஒருவர் மாற்றி ஒருவரை சாடுவதை கண் கூடாக பார்க்கின்றோம்.

இதில் யாரை குற்றம் சாற்றி என்ன ஆக போகிறது?

என்னை பொறுத்த வரை, மக்களின் பொறுப்பற்ற தன்மையைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். அவ்வளவு கூட்டத்தையும், போலீஸ் கட்டுப்படுத்துவது இயலாத காரியம் என்பது நமக்கு நன்று தெரியும். மக்கள் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளை கூட்டிக் கொண்டு மணிக்கணக்கில் நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன?

வரும் இளந்தலைமுறைக்கு என்ன சொல்லி கொடுக்கிறோம்?

ஒரு நடிகனுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்றா?

ஏசுவும் உடனிருப்பும்: 

ஏசுவே எனது தலைவர்

அவரே எனது முன்மாதிரி

விவிலியத்தில் எங்கெல்லாம் இறப்பு நிகழ்ந்து உள்ளதோ

இயேசு அங்கே தனது இருப்பை உணர செய்திருக்கின்றார்.

 

தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்என்று அவரை வருந்தி வேண்டினார். ஏசுவும் உடன் சென்றார்.

 

இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, “அழாதீர்என்றார்.

 

இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்என்றார். மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்என்றார்கள். அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.

 

'உடனிருப்பு' என்பது தான் நாம் உள்வாங்க வேண்டிய உண்மை.

திரு. விஜய் அவர்களின் 'உடனிருப்பை' மட்டும் தான் நான் எதிர்பார்த்தேன்.

அந்த நேரத்தில் நிகழ்வது நிகழ்ந்து விட்டது.

அந்த நேரத்தில் தேவை எல்லாம், ஒரு தலைவனின் 'உடனிருப்பு' மட்டுமே.

அதுவே அந்த கணத்தின் மாபெரும் மருந்து.

உங்கள் X பக்கத்தின் அனுதாபங்கள் எல்லாம் அரசியல்.

உங்கள் உடனிருப்பு மட்டுமே உள்ளத்தை ஆற்றுப்படுத்தும் அருமருந்தாக இருந்திருக்கும்.

உங்களின் அமைதியும், தலைமறைவும் மிகுந்த மன வேதனையையும், குழப்பத்தையும் தான் கொடுத்தது.

தலைவனாக உங்களை பார்த்த பலருக்கு, உங்கள் அமைதி சற்றே மன தடுமாற்றத்தை தான் கொடுத்தது.

நமது வாழ்வின் முக்கிய தருணங்கள் எல்லாம் சந்திப்பின் தருணங்கள் தான்.

சில தருணங்களில், அந்த உடனிருப்பின் மகிழ்வே, உறவை நம்முள் வளர்க்கும்.

அந்த உடனிருப்பு இல்லையேல், உறவுகள் விரிசல் காணும். 

எல்லா சந்திப்புகளிலும் முழுமையான உடனிருப்பை உணரும் போது தான்

உறவின் நெருக்கத்தையும், மகிழ்ச்சியையும் அனுபவிக்க முடியும்.

 

அரசியலில் நீங்கள் யார் பக்கம் நிற்க போகிறீர்கள்?

உங்கள் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம், காலம் வெளிப்படுத்தும்.

நீங்கள் சினிமா போன்ற வசனங்களை விட்டு விட்டு, அரசியல் பேச வேண்டும் என்ற கட்டாயத்தையும் காலம் உங்களுக்கு கற்று கொடுக்கும்.

இப்போது நீங்கள் கற்று கொள்ள வேண்டிய முக்கிய பாடம், இதோ கண்ணதாசன் வரிகளில்...

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...

வாசல் தோறும் வேதனை இருக்கும்..

வந்த துன்பம் எதுவென்றாலும்

வாடி நின்றால் ஓடுவது இல்லை...

 

ஓடி ஒளியாமல்

ஒரு தலைவனாய் உடன் நில்லுங்கள்

'உண்மையான தலைவன் நீ' என்று உலகம் உணர்ந்தால்

உன் பின் இந்த உலகம் வரும்.

இல்லையேல்,

உதறி தள்ளி விட்டு

உருண்டோடும்.

புதன், 9 ஏப்ரல், 2025

ஒரு ஸ்பெஷல் சாதா...

தலைக்கு மேல் வேலை இருந்தது... மனைவியிடம் சொல்லி விட்டு, முடி வெட்டலாம் என சலூனுக்குப் போனேன். எனது முறை வந்ததும், போய் சுழலும் நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னை சுழல விட்டு, என் தலையையே பார்த்தான் அந்த பையன். அப்படி பட்ட பார்வை எனக்கு பழகி இருந்தது.

சாதாவா? ஸ்பெஷல் ஆ? ன்னு கேட்டான்.

என் தலைக்கு ஸ்பெஷல்லா வெட்டுனாலே, அது சாதாவா தான் தெரியும் தம்பி. அதனாலே, சாதாவே வெட்டுன்னு சொன்னேன்.

சாதாவா? என ஒரு கேவல தொனியில் கேட்டுவிட்டு வேலையை வேண்டா வெறுப்பாய் தொடர்ந்தான்.

தலை 'கனம்' குறைந்ததால், வீடு திரும்புகையில் ஹோட்டல் போய் டிபன் சாப்டுட்டு. ஒரு காபி குடிச்சுட்டு போலாம்னு நெனச்சேன். போய் உட்கார்ந்ததும், பக்கத்து டேபிளில் சர்வர் பையன், நீண்ட உணவு பட்டியலை 5 நிமிடமாக ஒப்பித்துக் கொண்டிருந்தான். நீண்ட பெருமூச்சு விட்டு அவன் முடித்த போது, 'பக்கத்து டேபிள் காரர் இன்னைக்கு என்னப்பா ஸ்பெஷல்னு கேட்டார்அதை அந்த சர்வர் பையன் மூச்சு முட்ட சொல்லும் முன்னமே கேட்டு இருக்கலாமே? ன்னு நினைத்து கொண்டேன்.

அதே யோசனையில் 4 இட்லி சாப்டுட்டு, காப்பி கேட்டேன். சாதா காப்பியா? இல்ல டிகிரீ காப்பியான்னு சர்வர் பையன் என்னை கேட்டான்?

என்னப்பா வித்தியாசம்? ன்னு கேட்டேன்.

டிக்ரீ காப்பில, பால் தண்ணி கலக்காம 'திக்கா' இருக்கும் சார். அதுமட்டுமில்ல, பில்டர் காபி தூள் மட்டும் தான் பயன்படுத்துவோம் சார்ன்னு  விளக்கம் சொன்னான்.

வீடு திரும்பும்வரை, சாதா, ஸ்பெஷல் யோசனையாவே இருந்தது.

 

வரும்போது தான் கவனித்தேன்... பேருந்துகளில் சாதா பேருந்து, டீலக்ஸ் பேருந்து இருந்தது. அவ்வளவு ஏன்? swiggy, zomato, Blinkit, Zepto போன்ற இணைய வழி சேவைகளில் கூட, சாதா டெலிவரி, express டெலிவரி உள்ளதை உணர்ந்தேன். தெய்வ தரிசனங்களே கூட இன்று சாதா தரிசனம், ஸ்பெஷல் தரிசனம் என்றாகி விட்டது.

இந்த வாழ்க்கை எதை தான் விட்டு வைத்தது?

மனிதர்களை கூட மாத்தி வச்சுருக்கு.


இரண்டு இடங்கள் இந்த கருத்தியலை நம் மனதுக்குள் திணிக்கின்றன.

ஒன்று வீடு:

அவனைப் பார் எப்புடி படிக்கிறான்?

அவள பார் maths ல 100 மார்க் எடுக்குறா?

அந்த பையன பாத்தியா? கோல்ட் மெடல் வாங்கி இருக்கான்.

அந்த பொண்ண பாரு? எவ்ளோ fair ஆ அழகா இருக்குறா?

அந்த ஆள பாரு, காசுல மெதக்குறான்.

இவ்வாறு சாதாரண வாழ்க்கை வேண்டாம்; ஸ்பெஷல் வாழ்க்கை தான் வேணும்னு வீட்டுலயே, இந்த உள்ளார்ந்த மனவியலை உருவாக்கி விடுகிறோம்.

இரண்டு: பள்ளி

பள்ளிகளில் சொல்லவே தேவையில்லை.

ஆசிரியர்களும், பெற்றோர்களும் தனது குழந்தை ஸ்பெஷல் குழந்தையாகவே இருக்க விரும்புகிறார்கள்.

சராசரி மாணவர்களை அவர்கள் சீண்டுவது கூட கிடையாது.  

 

சாதாரண வாழ்க்கை என்பது வெற்றியடையாத வாழ்க்கை அல்ல.

அது பொருளாதார ரீதியான வெற்றியை முக்கியமானதாக கருதுவதில்லை

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திரு. ஜாதவ் பயேங்கை (Jadav Payeng) பலருக்கும் தெரியாது. மிகவும் எளிமையான மனிதர், ஒரு சிறிய குடிசை வீட்டில் வசிக்கிறார். டிவி, குளிர்சாதன பெட்டி, ஏசி, இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனம் அல்லது பிற அடிப்படை விஷயங்கள் எதுவும் அவரிடம் இல்லை.

இவர் இந்த உலகத்தின் பார்வையில் ஒரு சாதாரண மனிதன் தான்.

பல ஆண்டுகளாக அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

எந்த கோணத்தில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண வாழ்க்கை தான் வாழ்ந்து வந்தார்.

15 ஆண்டுகளாக, இந்த சமூகம் அவரை ஒரு சாதாரண வேலை செய்யும் ஒரு 'சாதாரண மனிதர்' என்றும், இன்னும் சொல்ல போனால், 'தோல்வியுற்றவர்' என்றும் முத்திரை குத்தியது.

ஆனால் அவர் தனது வழியில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

உலகம் முழுவதும் இவர் 'இந்தியாவின் வன மனிதன்'  என்றே  அறியப்படுகின்றார்.

தனது 16 வயதில் மரங்களை நேசித்து மரக்கன்றுகளை நடுவதற்கு தொடங்கிய அவர், 36 ஆண்டுகள் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்து வந்தார்.

இது இப்போது 1360 ஏக்கர் வனப்பகுதியாக மாறி விட்டது.

மேலும் 100 க்கு அதிகமான யானைகள்,

ஐந்து/ ஆறு புலிகள்,

சில காண்டாமிருகங்களின் வாழ்விடம் ஆகி போனது.

ஆனால் தனது தாய்நாடான இந்தியாவிலேயே இவர் ஒரு ஸ்பெஷல் மனிதராக இல்லை.

ஆனால் தனக்கு எது அர்த்தம் தருமோ, அதை அவர் பாணியில் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

 

Franz Kafka, என்ற யூத எழுத்தாளர், வாழ்க்கையை பற்றி கூறுவது இங்கு நம் கவனத்தை ஈர்க்கிறது.

"என்னை பொறுத்தவரை வாழ்க்கை அர்த்தமுள்ளது போல ஒரு மாயை உருவாக்கபட்டுள்ளது.

இங்கு கல்வி, பணம், புகழ் மற்றும் பலவற்றை சேர்ப்பதோ அல்லது அவற்றை அடைவதோ மட்டுமே அர்த்தமுள்ள வாழ்க்கை என நினைக்கிறோம். அது ஒரு மாயை நமக்கு நாமே உருவாக்கியது.

பிச்சைக்காரன் முதல் கோடீஸ்வரன் வரை,

முட்டாள் முதல் விஞ்ஞானி வரை

நல்லவன் மற்றும் கெட்டவன்,

தனது ஏதோ ஒரு பங்களிப்பை வாழ்வில் செய்துவிட்டு செல்கின்றனர்.

இதனால் எந்த உபயோகமும் இல்லை.

இவை இல்லாமலும் உலகம் இயங்கும். இதில் எந்த அர்த்தமும் இல்லை.

நமக்கு பிடித்தோ பிடிக்காமலோ ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

இங்கு நாம் எது எல்லாம் வாழ்கையில் அர்த்தம் என நினைக்கிறோமோ, அவை இல்லாமலும் உலகம் இயங்கும்.

எந்த மாற்றமும் இருக்காது.

நமக்கு நாமே சொல்லி கொல்லும் மிக பெரிய பொய் 'வாழ்க்கை அர்த்தமுள்ளது' என்பதுதான்.

அர்த்தமற்றது வாழ்க்கை.

பிறப்பு முதல் இறப்பு வரையில் நம்முடைய ஆசையை பூர்த்தி செய்யதான்  ஓடி கொண்டு இருக்கிறோம். இதனால் வாழ்க்கை அர்த்தமுள்ளது என ஆகிவிடாது.

நீங்கள் உங்கள் ஆசையை  அடைந்தாலும், அடையாவிட்டாலும் எதுவும் மாறப் போவதில்லை."

 

kafka வின் வார்த்தைகள் சற்றே நம்மை புரட்டி போடத்தான் செய்கிறது. வாழ்க்கைக்கென்று எந்த அர்த்தமும் இல்லை. நாம் தான் நமக்கு அர்த்தத்தை உருவாக்கி கொள்கிறோம்.

'சாதாரண வாழ்க்கை' என்பது தோல்வியல்ல. மாறாக, வாழ்க்கையின் முடிவற்ற எதிர்பார்ப்புகளில் இருந்து விடுதலை என்றே நான் கருதுகிறேன்.

நிம்மதியான வாழ்க்கை என்பது நாம் நமக்கு ஏற்படுத்தி கொள்ளும் தொடர்புகள், இனிய உறவுகள் மற்றும் நமக்கு நாம் உருவாக்கி கொள்ளும் அர்த்தங்கள் தான். இதில் எங்கு போட்டியும், ஒப்புமைகளும் வந்தது.

'சாதாரண வாழ்க்கை' என்பது எதையும் செய்யாமல் இருப்பதல்ல, மாறாக உங்களுக்கு எதையெல்லாம் செய்ய விருப்பமோ அதை  செய்து நிம்மதியாய் வாழ்வது.

உங்களுக்கு விருப்பமானதை பிறர் மேல் திணிக்காமல் வாழ்ந்தாலே, எல்லோருடைய வாழ்க்கையும் தனித்தன்மை வாய்ந்தது தான், நிம்மதியானதுதான்.

எனது பள்ளியில் வாரா வாரம் மாணவர்க்கு "BEST STUDENT OF THE WEEK" என்று ஒரு விருது உண்டு. இனி அந்த விருது கிடைக்கிறதோ இல்லையோ, மாணவரிடம், 'எல்லோரும் அவரவர் வாழ்க்கையை நிம்மதியாய் வாழ்வதே சிறப்பு' தான் என சொல்ல வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கும்போதே, என் இனிய மனையாளின் குரல், இனிதாய் கேட்டது சமையலறையிலிருந்து, 'முட்ட தோசையா? சாதா தோசையா?'

'முதல்ல சாதா தோசை பிறகு முட்டை தோசை' ன்னு பதிலளித்தேன்.

சரிதானே!

 

பின்குறிப்பு:

'கோயினோபோபியா' (Koinophobia) என்பது ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கான பயம், ஒருவரின் வாழ்க்கை சாதாரணமானது அல்லது முக்கியமற்றது, அதற்கு அர்த்தமோ நோக்கமோ இல்லை என்ற உணர்வு.