சில விவாதங்கள் ஒருபோதும் முடிவதில்லை
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (645)
தாம் சொல்ல
நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச்
சொல்லை யாவரும் சொல்ல வேண்டும் என்று வள்ளுவர் 'சொல்வன்மை' யில் கூறுகின்றார்.
ஆனால் இந்த
திருக்குறள், உறவுகளுக்கு இடையே ஏற்படும் உரையாடல்களுக்கு சொல்லப்பட்டதல்ல. ஆனால் பெரும்பான்மையோர்
(என்னையும் சேர்த்துதான்), இதை உறவுகள் விரிய காரணமாக்கி விடுகின்றனர்.
உரையாடல் - விவாதம்:
எத்தனை முறை,
நமது அன்பானவருடன் ஏற்பட்ட சிறிய உரையாடல், விவாதமாகி, விரிசல் ஏற்பட்டு, அமைதியாய்
பிரிந்திருக்கிறோம். அந்த விவாதங்கள், அமைதியில் முடிந்தாலும் சரி; அல்லது ஆரவாரத்தோடு
முடிந்தாலும்; அவை ஒரு போதும் முடிவதில்லை. அவை அந்த இடத்தை விட்டு, வேறு இடத்திற்கு
பெயர்ந்து செல்கின்றனவே தவிர, ஒரு போதும் முடிந்து போவதில்லை.
அவை அமைதியானதொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றன, அவ்வளவே. உங்கள் நினைவுகளின் ஆழத்திற்கு.
இடப்பெயர்ச்சி:
பெரும்பாலான விவாதங்கள், வார்த்தைகள் ஓய்ந்ததும் முடிவுக்கு வருவதில்லை. அவை மிகத் தாமதமாகவே முற்றுப் பெறுகின்றன.
சில நேரங்களில் பல வருடங்கள் கழித்து.
சில நேரங்களில் ஒருபோதும் முற்று பெறுவதே இல்லை.
வார்த்தைகள் நின்றுவிடுகின்றன.
மனிதர்கள் கடந்துவிடுகிறார்கள்.
வாழ்க்கை பரபரப்பாகிவிடுகிறது.
ஆனால், வியப்பளிக்கும் வகையில், பல கருத்து வேறுபாடுகள் வெறுமனே தங்கள் இருப்பிடத்தை மாற்றிக்கொள்கின்றன. அவை விவாதம் நடந்த அந்த அறையை விட்டு வெளியேறி, ஆழ் நினைவுகளுக்குள் குடியேறுகின்றன.
அங்குதான் அவை அமர்ந்திருக்கின்றன.
காத்திருக்கின்றன...
மிக அமைதியாக.
சரியான நேரத்திற்காய் காத்திருக்கின்றன:
'அன்று வேறு மாதிரி பதில் சொல்லியிருக்கலாமோ' என்று நீங்கள் ஏங்கும் ஒரு தருணம்.
நீங்கள் திருத்தாமல் விட்ட ஒரு புரிதல் குறைபாடு. அந்த புரிதலை சொல்லி தெரிய படுத்தி இருக்கலாமோ என்ற ஆதங்கம்.
விசித்திரம் என்னவென்றால், விவாதித்தவர் எப்போதோ விவாதத்தை நிறுத்திய பிறகும், நாம் இன்னும் அதைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதுதான்.
வெளியே சத்தமாக அல்ல.
நம் மனதிற்குள்.
வாகனம் ஓட்டும்போது...
நடக்கும்போது...
உறங்க முயலும்போது...
யாரோ ஒருவர் சொன்ன சொல் நம்மை பழைய நினைவுகளுக்குள் தர தரவென இழுத்து செல்லும்போது;
நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், நம்மை தொடர்ந்து ஆட்கழிக்கும்போது.
எப்போதோ முடிந்து
மடிந்து போன உரையாடலை, இப்போது மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட்டிப் பார்க்கிறோம்.
இன்னும் சிறந்த பதில்களை அதில் சேர்க்கிறோம்.
வலிமையான வாதங்களை முன்வைக்கிறோம்.
மூன்று வருடங்கள் தாமதமாக வந்து சேர்ந்த அந்த "மிகச்சரியான" பதிலைச் சொல்லிப் பார்க்கிறோம்.
முற்றுப்புள்ளி:
பல கற்றும்,
இது நாள் வரை நான் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதுதான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நினைத்திருந்தேன்—. ஆனால் சமீபகாலமாக எனக்கு அதில் உடன்பாடில்லை.
சில விவாதங்கள், யாரோ ஒரு நபர் திறமையாக வாதிட்டதால், இறுதியாக வென்றுவிட்டதால், முடிவுக்கு வருவதில்லை. மாறாக, அந்த விவாதத்தின் சுமையைத் தாங்கித் தாங்கி ஒருவருக்கு அலுத்துப் போகும்போதுதான் அது முடிகிறது.
அதற்குக் காரணம் அறிவோடு விவாதித்தவர் வெல்லும் சொல் கொண்டவர் என்பதால் அல்ல; அல்லது அவர் சொன்னது சரி என்று அர்த்தமல்ல
அதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால்: அந்த விவாதம்
இனிமேலும் தங்கள் மனதை ஆக்ரமித்து, மென்மேலும் துன்பம் தர அவர்கள் விரும்ப வில்லை என்று
தான் பொருள்.
தங்கள் மனதின் வெளியை அவர்கள் இந்த விவாதத்துக்கு கையளிக்க
விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
ஒருவேளை, அந்த வெற்றியை விடவும், இந்த மனவிலகலே அவர்கள் மனதிற்கு மிக நெருக்கமானதாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அனுபவத்தின் பரப்புரை.. மிக நன்று
பதிலளிநீக்குThanks Eugene. Yea true. I started thinking about my own experience while coming by Metro.
நீக்கு